பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட வழிகாட்டல்கள்
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைச் சட்டத்தின் (ICCPR) மூன்றாம் பிரிவின் கீழ் குற்றச்சாட்டுகளுக்காக சந்தேகநபர்களை கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டுதல்களை பொலிஸ்மா அதிபர் வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பு, அனைத்து சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் உட்பட அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தச் சட்டத்தின் பிரிவுகளின்படி, ஒரு நபரை கைது செய்யும் முன் அவர் வெளியிட்ட கருத்து அல்லது உரையால், போரைத் தூண்டுகிறதா, அல்லது தேசிய, இன, மத அடிப்படையிலான வெறுப்பை தூண்டி, பாகுபாடு, விரோதம் அல்லது வன்முறைக்கு வழிவகுக்கிறதா என்பதை முழுமையாக ஆய்வு செய்த பின்னரே கைது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பொலிஸ்மா அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இவ்வகை கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுமாயின், அதற்கு முன் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி, சட்டப்பிரிவு இயக்குநரிடம் தகவல் அளித்து முன்கூட்டியே எழுத்து மூலம் அனுமதி பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிலர் அல்லது குழுக்களுக்கு எதிராக பொதுவாக மனவருத்தம், அவமதிப்பு அல்லது மத அவமதிப்பு ஏற்பட்டதாக மட்டும் கருதப்படுவது, ICCPR சட்டத்தின் கீழ் கைது செய்ய போதுமான காரணமாக கருதப்படக்கூடாது என வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகைய நடைமுறைகளை மீறி செயல்படுவது அல்லது சட்டத்தை தவறாக பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ்மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.