ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடித்தால் வீதியில் இறங்குவோம்
மக்கள் ஆணையின்றி ஆட்சி அதிகாரத்தில் இருக்க முயற்சித்தால், மக்களுக்காக வீதியில் இறங்க போவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க (Tissa Attanayake) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் பதவிக்காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பது சம்பந்தமாக நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே முன்வைத்த யோசனை தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
யாருடைய தேவைக்காக இந்த யோசனை முன்வைக்கப்படுகிறது என்று எனக்கு தெரியவில்லை. ஜனாதிபதியும் இது சம்பந்தமாக சூசகம் வெளியிட்டிருந்தார். தனக்கு இரண்டு ஆண்டுகள் பணியாற்ற முடியாமல் போனது என ஜனாதிபதி கூறியிருந்தார். புதிதாக வேலை செய்ய ஆரம்பிக்கவாம்.
1970 ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கு 5 ஆண்டுகள் ஆட்சியில் இருக்க மக்கள் வாக்களித்தனர். அவர் மக்களின் ஆணையின்றி, 77 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்ததன் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வரலாற்றில் வீழ்ச்சிக்கு உள்ளானது.
இதனை அறிந்தால், எவரும் இப்படியான கதைகளை கூற மாட்டார்கள். தமது ஆணையின்றி ஆட்சி செய்ய மக்கள் எவருக்கும் ஆட்சி அதிகாரத்தை வழங்கவில்லை. இதற்கு எதிராக செயற்பாடுகளை முன்னெடுக்க ஐக்கிய மக்கள் சக்தி உட்பட எதிரக்கட்சிகள் தயார்.
மக்கள் ஆட்சி செய்யுமாறு கோரவில்லை. நிவாரணங்களையே கோருகின்றனர். இது ஆட தெரியாதவன் மேடை கோணல் எனக் கூறியது போன்ற விடயம்.
மக்கள் ஆணை வழங்கினால், அந்த காலப்பகுதியில் தமது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். பொறுப்பை நிறைவேற்றாது விளக்கம் கூறி பயனில்லை. ஜனாதிபதி, பிரதமர் அரசாங்கத்தையும் நாட்டையும் பொறுப்பேற்கின்றனர்.
நாட்டில் எந்த பிரச்சினைகள் இருந்தாலும் அவற்றை தீர்த்து மக்களுக்கு பணியாற்றவே அவர்களுக்கு இந்த பொறுப்பு வழங்கப்படுகிறது. நாட்டையும் நாட்டு மக்களையும் பராமரிக்க வேண்டும். மக்களை பாதுகாக்க வேண்டும். இதனை செய்ய முடியாத போது விளக்கம் கூற தேவையில்லை.
அரசியலமைப்பு ஊடாக தமக்கு பணிகளை செய்யவே மக்கள் ஆட்சி அதிகாரத்தை வழங்குகின்றனர். ஜனாதிபதிக்கு ஐந்தாண்டுகள், நாடாளுமன்றத்திற்கு ஐந்தாண்டுகள் இதுதான் நாட்டின் அரசியலமைப்பு.
அதனை விடுத்து பலவந்தமாக ஆட்சி அதிகாரத்தை தக்கவைக்க முயற்சிப்பார்கள் என்றால், 1977 ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கு நடந்ததை பாடமாக கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.