எரிபொருள் சேகரிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் அடையாளம்
தமது தேவைக்கு மேலதிகமாக எரிபொருளைச் சேமிக்கும் நபர்கள் சுமார் 1200 பேர் வரையில் தற்போதைக்கு இனங்காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது இதனைத் தெரிவித்துள்ளார்.
ஒரே நபர் அல்லது ஒரே வாகனம் பல்வேறு எரிபொருள் நிலையங்களில் ஒரே நாளில் எரிபொருள் பெற்றுக் கொள்வதைக் கண்காணிக்கும் வகையில் பொலிஸாருடன் இணைந்து மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு புதிய செல்போன் செயலி (மொபைல் ஆப்) ஒன்றை நிறுவியுள்ளது.
வெவ்வேறு இடங்களில் எரிபொருள் பெற்றுக் கொள்ளும் தனி நபர்கள்
அதன் மூலமாக தற்போதைக்கு தமது தேவைக்கு அதிகமாக அடிக்கடி எரிபொருள் பெற்றுக் கொள்ளும் தனி நபர்கள், ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் எரிபொருள் பெற்றுக் கொள்ளும் தனி நபர்கள் மற்றும் வாகனங்கள் தொடர்பான தகவல்கள் பதிவு செய்யப்படத் தொடங்கியுள்ளன.
அந்த வகையில் தற்போதைக்கு தமது தேவைக்கு மேலதிகமாக எரிபொருளைச் சேமிப்பதில் ஈடுபடும் சுமார் 1200 பேர் வரை கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.