டெங்கு தாக்கத்தினை ஏற்படுத்தும் நுளம்பு குடம்பிகள் அடையாளம்: வைத்தியர் கே.கிரிசுதன்(Video)
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 20 வீதத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் டெங்கு தாக்கத்தினை ஏற்படுத்தும் நுளம்பு குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.கிரிசுதன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சிறுவர்கள், பெண்கள் டெங்கு தாக்கத்திற்குள்ளாகும் நிலை அதிகரித்து வருவதாகவும் இது இன்னுமொரு அபாயகரமான சூழலைக் காட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் டெங்கு நுளம்பினை கட்டுப்படுத்தும் வகையில் புகை விசிறும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்ட பகுதி மற்றும் டெங்கு நுளம்புகள் இனங்காணப்பட்ட பகுதிகளில் இந்த புகை விசிறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.கிரிசுதனின் தலைமையில் பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் இந்த புகை விசிறும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த மாதத்தின் ஆரம்ப வாரத்தில் ஆறு டெங்கு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் டெங்கின் தாக்கம் அதிகரிக்கும் நிலையேற்பட்டுள்ளதனால் பொதுமக்கள் தங்களது சுற்றாடலைத் தூய்மையாக வைத்துக்கொள்ளுமாறு மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.கிரிசுதன் வேண்டுகோள்விடுத்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் ஏப்ரல் மாதம் வரையிருந்து டெங்கு அதிகரித்த நிலை ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் படிப்படியாகக் குறைந்து நவம்பர் மாதம் வரையில் கட்டுப்பாட்டின்கீழ் காணப்பட்டது.
இருந்தபோதும் வடகீழ் பருவ பெயர்ச்சி மழையின் பின்னர் கோவிடினால் முடக்க நிலையிலிருந்து வழமைக்குத் திரும்பியுள்ள நிலையில், டெங்கின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகின்றது.
டிசம்பர் மாதம் 10 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டிருந்தார்கள். 2022ஆம் ஆண்டின் முதல் வாரத்திலேயே ஆறு டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இந்த நிலையானது எதிர்காலத்தில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கின்றோம். எமது டெங்கு தடுப்பு குழுவினர் வீடுகள், காணிகளை சோதனைக்குட்படுத்திய நிலையில் 20வீதமான வீடுகள் டெங்கு நுளம்பு பரவலுக்கு ஏதுவான வகையில் டெங்கு நுளம்பு குடம்பிகளைக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இனங்காணப்படும் டெங்கு நோயாளர்களில் சிறுவர்கள் மற்றும் பெண்களின் அடையாளப்படுத்தப்படும் நிலை அதிகரித்து வருவதைக் காணமுடிகின்றது. இது இன்னுமொரு அபாயகரமான சூழலைச் சுட்டிக்காட்டி நிற்கின்றது.
வீடுகளுக்குள்ளேயும் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் தனியார் கல்வி நிலையங்கள், பாடசாலைகளிலும் டெங்கு நுளம்பு பரவும் இடம் காணப்படலாம் என்ற அபாயத்தினை சுட்டிக்காட்டி நிற்கின்றது.
இதேநேரம் கோவிட் அச்சுறுத்தலைத் தடுக்கும் பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் அனைவரையும் இதனைப் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
எமது பிரதேசம் இன்னுமொரு ஆபத்து நிலையினை நோக்கி நகராது இருப்பதற்காகப் பொதுமக்கள் தங்களது வீடுகள்,காணிகள்,அலுவலகங்கள்,பாடசாலைகள் நீர் தேங்கக்கூடிய இடங்கள், நீர் தேங்கக்கூடிய பாத்திரங்களை அகற்றி டெங்கு பாரிய அபாயகரமானதாக மாறாது உதவிசெய்யுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.
புத்தாண்டு காலம் என்பதனால் பொதுமக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் கடந்த காலத்தில் இவ்வாறான காலப்பகுதிலேயே அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாகவும் மக்கள் மிகவும் கவனமாகச் செயற்படுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் டெங்கு நோயின் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் தொடர்ச்சியாக பல்வேறு வேலைத் திட்டங்கள் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் டி.எஸ்.சஞ்ஜீவ் வழிகாட்டலில் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் கடந்த வருடத்தில் அதிக நோயாளர்கள் இனம் காணப்பட்ட இடங்களான கல்குடா, கண்ணகிபுரம் மற்றும் மீராவோடை போன்ற கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள குடியிருப்பாளர்களின் வீடுகள் அடையாளப்படுத்தப்பட்டு வீடு வீடாகச் சென்று களப் பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதன்போது சுற்றுச் சூழல் அவதானிக்கப்பட்டு நீர் தேங்கி நிற்கும் தேவையற்ற பொருட்கள் அகற்றப்பட்டு நுளம்பு பரவும் இடங்கள் அழிக்கப்பட்டு விழிப்புணர்வு அறிவுறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு சட்ட நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகிறது.
குறித்த நிகழ்வில் சுகாதார பரிசோதகர்கள், வைத்திய அதிகாரி அலுவலக
உத்தியோகத்தர்கள், பொலிஸார், இராணுவத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.





