கொடூரமாக கணவரை கொன்ற குற்றவாளிகளை மன்னிக்க மாட்டேன் – பிரியந்தவின் மனைவி உருக்கம்
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் சியால்கோட் நகரில் பணிபுரிந்து வந்த இலங்கையர் ஒருவர், வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்டு, எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் இலங்கையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இலங்கையைச் சேர்ந்த 40 வயதான பிரியந்த குமார தியவடன என்ற நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.கொல்லப்பட்ட பிரியந்த குமார தியவடன கனேமுல்ல நகரின் அருகே உள்ள கெந்தலியத்த பகுதியைச் சேர்ந்தவராவார்.
இந்நிலையில், இலங்கையரான பிரியந்தவின் மரணத்துக்கு காரணமானவர்களை மன்னிக்கப்போவதில்லை என்று அவரது மனைவி நிலுஷி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
”குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கி, அவர்களை சமூகமயப்படுத்தினால், இன்னும் பல பெண்களுக்கு கணவரை இழக்க வேண்டிய நிலைமையும், இன்னும் பல பிள்ளைகளுக்கு தமது தந்தையை இழக்க வேண்டிய நிலைமையும் ஏற்படும் அல்லவா? அவர்களுக்கு நிச்சயமாக தண்டனை வழங்கப்பட வேண்டும்.
தனது கணவர், தம்முடன் இருந்தவாறே தன்னையும், தனது குடும்பத்தையும் வழி நடத்துவார்.
தனது பிள்ளைகளின் கல்வியை சரியான முறையில் தொடர்ந்தவாறு, அவர்களின் வாழ்க்கையை சிறப்புற செய்வதே தனது நோக்கம்.எனது இலக்கை நோக்கி நான் செல்வேன். அதனையே எதிர்காலத்தில் முன்னெடுப்பேன்.
என் கணவர் இறப்புக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால், எம்மை போன்று, மேலும் பலர் பாதிக்கக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.