ஐ.தே.கட்சியின் தலைவர் பதவிக்கு தேவையான தகுதி எனக்கு இருக்கின்றது-ருவான் விஜேவர்தன
கட்சியினர் மற்றும் நாட்டு மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்தன் மூலமே தான் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவராக பதவி வகிப்பதாகவும் கட்சியின் தலைவர் பதவிக்கு தேவையான தகுதிகள் தனக்கு இருப்பதாகவும் காலநிலை மாற்றங்கள் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியினர் ஐ.தே.கட்சியில் இணைய வேண்டும்

ஐக்கிய மக்கள் சக்தியில் இருப்பவர்கள் ஐக்கிய தேசியக்கட்சியின் சகோதர நாடாளுமன்ற உறுப்பினர்கள். இதனால், இரண்டு அணிகளும் ஒன்றிணைய வேண்டும்.
திறமையான அரசியல்வாதிகள் வேறு கட்சிகளில் இருப்பதால், அவர்களுக்கு ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஆதரவளிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
இளம் புதிய முகங்களை ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் முன்நிறுத்த எதிர்பார்த்துள்ளோம். இந்த வேலைத்திட்டத்தின் கீழ் ஐக்கிய தேசியக்கட்சி வெற்றி பாதையை நோக்கி செல்வது சிரமமான காரியமல்ல.
தேர்தல் நெருங்கும் போது பல அணிகள் ஐக்கிய தேசியக்கட்சியில் இணைய தயாராக இருக்கின்றன. ஏனைய கட்சிகள், அமைப்புகளின் பிரதிநிதிகள் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைவது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
சர்வக்கட்சி அரசாங்கத்தில் இணைய ஆசைப்படும் ஐ.மக்கள் சக்தியினர்

இவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்லாது உள்ளூராட்சி சபைகளின் பிரதிநிதிகளும் இருக்கின்றனர். ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த பலர் என்னுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
சர்வக்கட்சி அரசாங்கத்தில் இணைய அவர்களுக்கு ஆசையாக உள்ளது. அந்த கட்சியின் தலைவரின் தீர்மானம் கிடைக்கும் வரை அவர்கள் காத்திருக்கின்றனர்.
கட்சி, வர்ண பேதங்களை ஒதுக்கி வைத்து விட்டு இந்த தருணத்தில் அனைவரும் ஒன்றிணைந்தால், நாட்டை அபிவிருத்தியை நோக்கி கொண்டு செல்லும் சந்தர்ப்பம் கிடைக்கும்.

ஜனாதிபதியிடம் சிறந்த நோக்கும், வேலைத்திட்டமும் இருப்பதால், சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைத்தால், எமக்கு நாட்டை நெருக்கடியில் இருந்து மீட்டெடுக்க முடியும் எனவும் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
ருவான் விஜேவர்தன, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உறவு முறை மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.