என்னை துன்புறுத்தியவர்களை மன்னிக்கின்றேன் - புஷ்பிகா டி சில்வா
என்னை துன்புறுத்தியவர்களை மன்னிப்பதாக திருமதி இலங்கை அழகு ராணி புஷ்பிகா டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினம் அதிகாரபூர்வமாக புஷ்பிகாவிடம் பறிக்கப்பட்ட திருமதி இலங்கை அழகுராணி கிரீடம் ஒப்படைக்கப்பட்டது. தமது மத நம்பிக்கைகளின் பிரகாரம் தன்னை துன்புறுத்தியவர்களை மன்னிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
யேசு கிறிஸ்து அன்பை போதித்துள்ளதாகவும், குரோதத்தை புகட்டவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மற்றையவர்கள் மீது பொறாமை கொள்வதன் மூலம் நாம் எதனையும் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், தமக்கு ஏற்பட்ட அவமானம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், மீளவும் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பிள்ளைகளைப் பராமரிக்கும் ஒற்றைத் தாய்மாருக்காக குரல் கொடுக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார். மேலும் எதிர்வரும் காலங்களில் அரசியலில் பிரவேசிக்கவும் வாய்ப்பு உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமதி இலங்கை அழகுராணி போட்டியில் மகுடம் வென்ற புஷ்பிகாவின் மகுடத்தை திருமதி உலக அழகுராணி கரோலின் ஜுரி பலவந்தமாக அகற்றி இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டவருக்கு வழங்கியிருந்தார்.
இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் திருமதி உலக அழகுராணி போட்டி இலங்கையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1984ம் ஆண்டு ரோசி சேனாநாயக்கவும், 2020ம் ஆண்டில் கரோலின் ஜுரியும் இலங்கைக்கு திருமதி உலக அழகு ராணி பட்டத்தை வென்று கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சம்பவத்திற்காக திருமதி இலங்கை அழகுராணி போட்டி ஏற்பாட்டுக் குழுவின் பணிப்பாளர் சந்திமால் ஜயசிங்க பகிரங்கமாக மன்னிப்பு கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.