மட்டக்களப்பில் மனைவியை தீ வைக்க தூண்டிய கணவன் கைது
தன்னை குற்றமற்றவள் என நிரூபித்து காட்டுமாறு கூறி, மனைவிக்கு தீ வைக்க முற்பட்ட கணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம், நேற்று(17.01.2026) மட்டக்களப்பு முனைக்காடு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ வைக்க தூண்டிய கணவன்
மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முனைக்காடு நாகதம்பிரான் கோவில் வீதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான 36 வயதுடைய தி. அனுஷ்வரன், அதே பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பிரகலாதேவி என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், சம்பவ தினமான நேற்று காலை 8.30 மணியளவில் கணவன்- மனைவிக்கு இடையே பணம் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டு, அது வாய்த்தர்க்கமாக மாறியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மனைவியை குற்றமற்றவள் என நிரூபித்து காட்டுமாறு வற்புறுத்திய கணவன், மனைவி மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீப்பெட்டியை கொடுத்து, அவரையே தீ வைத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.
கைது
இதனையடுத்து, மனைவி தீப்பற்றி எரிந்து கொண்டதில் படுகாயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, மனைவியை தீ வைக்க வைத்த கணவன் தனக்கு தானே கூரிய ஆயுதத்தால் குத்தி காயப்படுத்திய நிலையில், அவரை மனைவி கொலை முயற்சி மற்றும் தன்னை தானே காயப்படுத்திக் கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, இன்று(18) நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.