மனித உரிமை கண்காணிப்பகம் இலங்கையிடம் முன்வைத்துள்ள கோரிக்கை
இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை ரத்து செய்யுமாறு மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதான 16 பேரை இலங்கை அரசாங்கம் அண்மையில் விடுதலை செய்தமை வரவேற்கப்பட வேண்டியது என தெரிவித்துள்ளது.
எவ்வாறெனினும் இந்த எதேச்சாதிகார பயங்கரவாதத் தடைச்சட்டத்தை உடன் ரத்து செய்ய வேண்டியதன் அவசியம் இந்த விடுதலையின் மூலம் குறைவயைடவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.
அண்மையில் இலங்கை அரசாங்கம் சிலருக்கு பொதுமன்னிப்பு வழங்கிய போதிலும் அது தெரிவு செய்யப்பட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என மனித உரிமை கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
2019ம் ஆண்டு ராஜபக்சக்கள் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதன் பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி சிறுபான்மை சமூகம் ஒடுக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக இனக்குரோத அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சட்டம் ஒழுங்கினை அமுல்படுத்துவதற்கு சர்வதேச நாடுகள் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமென கங்குலி தெரிவித்துள்ளார்.