இந்த அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு எவ்வாறு நியாயத்தை பெற்றுக்கொடுக்கும் ? - ஞா.ஸ்ரீநேசன்
யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளையே சந்திக்க விரும்பாத நிலையில் பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்டோர் இருக்கையில் அந்த உறவுகளுக்கு இவர்களால் நியாயம் பெற்றுக் கொடுக்கப்படும் என்று எவ்வாறு நம்ப முடியும்? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் கேள்வியெழுப்பியுள்ளார்.
மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
"யாழ்ப்பாணம் மட்டுவில்லில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் பொலிசாரால் தாக்கப்பட்டமை மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய விடயம். யாழிற்கு விஜயம் மேற்கொண்ட பிரதமரைச் சந்தித்து தங்கள் உறவுகளின் அவலத்தை எடுத்துக்காட்ட முற்பட்ட போது பொலிஸார் மிகவும் கெடுபிடியாக நடந்து கொண்டார்கள், தாக்கினார்கள் இது மிகவும் மன வேதனையான விடயம் இப்படியான நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு உள்நாட்டுப் பொறிமுறை மூலமாக ஒரு தீர்வு கிடைக்கும் என்று நாங்கள் நம்புவது மிகவும் அறிவீனமான ஒரு செயலாகத் தான் இருக்கும்.
அந்த உறவுகளையே சந்திக்க விரும்பாத ஜனாதிபதி பிரதமர் இருக்கையில் அந்த உறவுகளுக்கு இவர்களால் நியாயம் பெற்றுக் கொடுக்க முடியும் என்று நாங்கள் நினைப்போமாக இருந்தால் எம்மைப் போன்று அறிவீனமானவர்கள் இருக்க முடியாது.
அந்த உறவுகளுக்கு
நீதி கிடைக்க வேண்டுமாக இருந்தால் நிச்சயமாக சர்வதேச பொறிமுறை மூலம் தான் நீதி
கிடைக்குமே தவிர உள்நாட்டுப் பொறிமுறை மூலமாக நீதி கிடைக்காது என்பது தான்
நாங்கள் கடந்த காலங்களில கற்றுக் கொண்ட படிப்பினையாக அமைந்திருக்கின்றது.
இவ்வாறு பிரதமரைச் சந்திக்க விடாமல் தாக்கியமைக்கான எதிர்ப்பினைத் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவுகள் வெகுஜன ரீதியான போராட்டத்தைச் செய்வதற்காக விளைந்திருக்கின்றார்கள். நிச்சயாக அவர்கள் பட்ட அந்த அவஸ்தையை வெளிக்காட்டுவதென்பது மிக முக்கியமான விடயமாகும். அவ்வாறு அவர்கள் அந்த ஆர்;ப்பாட்டத்தைச் செய்வதற்கான பொறுப்பு அவர்களிடம் இருக்கின்றது. அதற்கான ஆதரவினை ஒட்டுமொத்த தமிழர்களும் வழங்க வேண்டும்.
ஒரு ஜனநாயக நாட்டில் தங்களுக்கு ஏற்படும் அநீதிகளைச் சுட்டிக் காட்டுவதற்கு யாருக்கும் உரிமை இருக்கின்றது. அந்த உரிமையின் அடிப்படையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின்; உறவுகளுக்கு எற்பட்ட அந்த அவலத்தை, அராஜகத்தை அவர்கள் ஆர்ப்பாட்டத்தின் மூலமமாக வெளிப்படுத்துவதற்கு முனைந்திருக்கின்றார்கள். வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுகின்ற இந்த ஆட்சியாளர்களுக்கும், உலகத்திற்கு செய்தியை அவர்கள் சொல்ல வேண்டும்.
இந்த ஆட்சியாளர்களால் எமது உறவுகளுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க
முடியாது. சர்வதேச பொறிமுறையின் மூலம் தான் நீதியைப் பெற்றுக் கொடுக்க
முடியும். மனித உரிமைகள் ஆணையாளர் கூட இந்த உள்நாட்டுப் பொறிமுறையைப் பற்றி
தெரிந்திருக்கின்றார். அதற்கேற்ற விதத்தில் எங்களது அரசியற் செயற்பாடுகளும்
இருக்க வேண்டும்.
அண்மையில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் இலங்கை வந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கலந்தரையாடியிருக்கின்றாhர். அந்த வேளையில் பல விடயங்கள் அங்கு சொல்லப்பட்டிருக்கின்றது.
13வது திருத்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறைமை என்பது ஆரம்பப் புள்ளியாக அமைத்துக் கொண்டு அதற்கு மேலே சென்று சமஸ்டிக் கட்டமைப்பு ரீதியான தீர்வு தான் தமிழர்கள் சுயமரியாதையோடு, சுயகௌரவத்தோடு சமத்துவமாக வாழ்வதற்கு உதவும் என்ற விடயம் சொல்லப்பட்டது. ஒற்றையாட்சி முறை என்பது சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை வெளிப்படுத்துகின்ற ஒரு முறை.
இந்த ஆட்சி முறை கடந்த 74 ஆண்டுகளாக தோல்வியில் முடிந்த ஆட்சி முறையாக இருக்கின்றமையால். இந்த நாட்டில் மூவின மக்களும் சமத்துவமாக வாழ்வதாக இருந்தால் சம்ஸ்டி ஆட்சி முறையைப் பெற்றுக் கொடுப்பதற்கு இந்தியா முனைய வேண்டும்.
இந்த 13வது திருத்தம் இருக்கும் போதே காணி அபகரிப்புகள் நடைபெற்றிருக்கின்;றன, காணி பொலிஸ் அதிகாரங்கள் தரப்படவில்லை, வெளிநாடுகளில் இருந்து உதவிகளைப் பெறக் கூடிய நிதி அதிகாரங்கள் இல்லாமல் இருக்கின்றது. இந்த ஒற்றையாட்சி முறையினால் சிங்கள மக்கள் கூட பயன் பெற்றுள்ளார்களா என்று பார்த்தால் அதவும் இல்லை.
தோல்வியடைந்த ஒற்றையாட்சி முறைமையைத் தொடர்ந்தும் தூக்கிக் கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. யதார்த்தமாகச் சிந்தித்து இங்கு ஒரு சமஸ்டிக் கட்மைப்பை உருவாக்குவதற்கு இந்திய வெளிவிகார அமைச்சர் உதவி செய்ய வேண்டும். இது தொடர்பில் இன்னும் இன்னும் இழுத்தடித்துக் கொண்டு போவதென்பது தமிழ் மக்கள் மத்தியல் மேலும் விரக்தியை ஏற்படுத்துகின்ற செயலாகவே அமையும்.
இந்தியாவின் தமிழ்நாடு என்பது இலங்கைத் தமிழ் மக்களின் தொப்புல்கொடி உறவாக அமைந்திருக்கின்றது. அந்த அடிப்;படையில் சீனாவா இந்தியாவா வடக்;கு கிழக்கில் முதலீடுகளைச் செய்ய முடியும் என்ற கேள்வி எழுகின்ற போது தமிழர்களின் கலாசாரப் பின்னணியோடு, மொழி ரீதியான பின்னணியைக் கொண்டுள்ளதன் அடிப்படையில் இந்தியா முதலீடுகளைச் செய்வதற்கு தமிழ் மக்கள் மத்தியில் எதிர்ப்பிருக்காது.
இந்தியாவும் முதலீடுகளைச் செய்வதோடு மட்டுமல்லாது தமிழ் மக்களின் வாழ்வாதாரம்,
சமூக, பொரளாதார, அரசியல் ரீதியான அபிவிருத்திளை அடைவதற்குரிய செயற்பாடுகளைச்
செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாது தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டுக்
கொண்டிருக்கின்ற நிலைமையை விடுத்து புத்துணர்வடன் தமிழ் மக்களுக்குரிய
தீர்;வையும் பெற்றுக் கொடுப்பதற்கு முன்வர வேண்டும்" என்று தெரிவித்தார்.