ஜனாதிபதி மாளிகையில் புராதன பொருட்களில் கை வைத்தவர்களுக்கு சிக்கல்
ஜனாதிபதி மாளிகையில் திருடப்பட்ட பல பொருட்களுடன் மூன்று சந்தேக நபர்களை வெலிக்கடை பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ராஜகிரிய ஒபேசேகரபுர பிரதேசத்தைச் சேர்ந்த மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தபோது, சந்தேக நபர்கள் ஜன்னல் திரைச்சீலைகளைத் தொங்கவிட சுவர்களில் பொருத்தப்பட்டிருந்த 40 தங்க நிற பித்தளைப் பந்துகளைத் திருடிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் கைது
சந்தேகநபர்கள் பழைய பொருட்களை விற்பனை செய்வதற்கு தயாராக இருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக ஜனாதிபதி மாளிகையில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் கொழும்பு வடக்குப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
புராதன பொருட்கள் மாயம்
இதேவேளை ஜனாதிபதி மாளிகையில் இருந்து பல புராதன பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதனுடன் தொடர்புடையவர்களை பொலிஸார் தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.