யாழ். போதனா வைத்தியசாலையின் கழிவுகளை எரிப்பதற்கு இடம் வழங்கிய சிவபூமி(Photos)
யாழ். போதனா வைத்தியசாலையின் கழிவுகளைத் தகனம் செய்வதற்குச் சிவபூமி அறக்கட்டளையினர் காணியை வழங்கியுள்ளதாக செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் (03.04.2023) வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் ஓவியக் கண்காட்சியில் கலந்து கொண்ட பின்னர் விருந்தினர் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். போதனா வைத்தியசாலையில், மனித உடல்களிலிருந்து எடுக்கப்படும் அவையங்கள் மற்றும் வேறு கழிவுகளை எரிப்பதற்கு யாழ்ப்பாணத்தில் பல இடங்களைத் தெரிவு செய்திருந்த போதும் அதற்கான இடங்கள் எவையும் வழங்கப்படவில்லை.
அதிகப் பணச் செலவு ஏற்படும்
ஆகையால் அந்தக் கழிவுகளை குருநாகலில் தகனம் செய்வது எனத் தீர்மானிக்கப்பட்டது. தற்போது வைத்தியசாலையானது மிகுந்த நிதி நெருக்கடிகளிலும் மருந்து தட்டுப்பாடுகளிலும் உள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் குறித்த கழிவுகளை எடுத்துச் செல்வதற்கு அதிகப் பணச் செலவு ஏற்படும். ஆகையால் எங்களது சிவ பூமி அறக்கட்டளையின் ஒரு பகுதி காணியை இதற்காக நாங்கள் வழங்கியுள்ளோம்.
மனித உடலிலிருந்து எடுக்கப்படும் அவையங்களை எரிக்க வேண்டும். இந்த 21வது
நூற்றாண்டிலும், அதற்காகத் தெரிவு செய்யப்படும் இடங்களில் அந்த பணிகளை
முன்னெடுக்க விடாதது என்பது வேதனையை ஏற்படுத்துகிறது எனத் தெரிவித்துள்ளார்.












