சுற்றுலாப் பயணிகளுக்கு 5 இலட்சம் இலவச விமான டிக்கெட்கள்: ஹொங்கொங் அரசு அறிவிப்பு
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலா துறையை மேம்படுத்தும் வகையில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு 5 இலட்சம் விமான டிக்கெட்டுகளை இலவசமாக வழங்குவதாக ஹொங்கொங் அரசு அறிவித்துள்ளது.
இத் திட்டத்திற்கு தலைமை நிர்வாகியான ஜோன் லீ (John Lee) இன்றைய தினம் (02.03.2023) ஒப்புதல் அளித்துள்ளார்.
ஹொங்கொங்கில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து வருவதால், அதிலிருந்து மீண்டுவருவதற்காக அந்நாட்டு அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஹொங்கொங் எயார்லைன்ஸ்
அதன்படி, ஹொங்கொங் எயார்லைன்ஸ் நிறுவனம், 5,00,000 விமான டிக்கெட்களை இலவசமாக வழங்கவுள்ளது.
இது தொடர்பில் கடந்த அக்டோபர் மாதமே செய்தி வெளியான நிலையில், அதற்கு தலைமை நிர்வாகியான ஜோன் லீ, இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, “கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் 5 லட்சம் இலவச விமான டிக்கெட்கள் வழங்கப்படவுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கான ஏற்பாடுகள் ஹொங்கொங் எயார்லைன்ஸ் விமானச் சேவை நிறுவனங்களுடன் இணைந்து தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், பயணிகளைத் தெரிவு செய்யப்படும் விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா காலத்திலேயே விமான டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்கிவிட்டதாகத் தெரிவித்துள்ள ஹொங்கொங் தங்கள் நாட்டிற்கு வருவோர் குறைந்தபட்சம் 2 நாட்கள் தங்கியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




