தோல்வியடையும் எண்ணம் இருந்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்துங்கள் - முருத்தெட்டுவே ஆனந்த தேரர்
அரசாங்கத்திற்கு தோல்வியடையும் எண்ணம் இருந்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்துங்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு எச்சரிக்கை விடுப்பதாக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு - நாராஹென்பிட்டி அபயராம விகாரையில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்துரைக்கையில், இடி விழுந்தது போல் திடீரென இந்த தேங்காய் எண்ணெய் பிரச்சினை உருவாகியது. பொருட்களின் விலைகள் ரொக்கட் போல் உயர்ந்து வருகிறது.
அமைச்சர்கள் எதனை கூறினாலும் பொருட்களை கொள்வனவு செய்ய கடைகளுக்கே செல்ல வேண்டும். கடைகளுக்கு சென்றால், அமைச்சர்கள் கூறும் விலையில் பொருட்கள் இல்லை. அங்கு விலைகளில் மாற்றம் காணப்படுகிறது.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை போக்கவே நாங்கள் புதிய அரசாங்கத்தை தெரிவு செய்தோம். அரசாங்கத்தின் குறைகளை நாங்கள் சுட்டிக்காட்டும் போது, எம்மில் சிலர் துதிப்பாடிக் கொண்டிருக்கின்றனர்.
பிக்குமார் துதிப்பாடினால், அரசாங்கம் தவறான வழிக்கு செல்லும். தற்போது ஊழல், மோசடிகள் அதிகரித்து வருகின்றன.
அமைச்சர்கள் உதய கம்மன்பில், விமல் வீரவங்ச மற்றும் அபயராம விகாரை உள்ளிட்ட அணிகள் இல்லை என்றால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உருவாகி இருக்காது. நாங்கள் ஒன்றரை ஆண்டுகளாக காத்திருந்தோம். முடிந்தால், மாகாணசபைத் தேர்தலை நடத்துங்கள்.
தேர்தலை நடத்தினால், அரசாங்கம் எந்த இடத்தில் இருக்கும் என்பது தெளிவாகும். யார் என்ன கூறினாலும் புத்தாண்டுக்கு பின்னர் நாங்கள் அணித்திரள்வோம்.
மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டாம். அரசாங்கத்திற்கு தோல்வியடையும் எண்ணம் இருந்தால், மாகாணசபைத் தேர்தலை நடத்துங்கள் எனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.