துன்புறுத்தி மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டாரா சிறுமி ஹிஷாலினி?
முன்னாள் அமைச்சர் ரிசார்ட் பதியுதீன் வீட்டில் வேலைபார்த்த 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் காவல்துறை திணைக்களம் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
இதுவரை இந்த சம்பவம் தொடர்பில் 36 வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதனூடாக கிடைக்கப்பெற்றுள்ள அனைத்து சாட்சிகளையும் கொண்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதோடு சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பாக சிறப்பு விசாரணைகளை மேற்கொள்ளும் தேர்ச்சிபெற்ற பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் சில விடயங்கள் மீது கூடுதல் அவதானம் செலுத்தப்படுகின்றது. அவற்றுள் முக்கியமாக சிறுமியின் மரணம் நிகழ்ந்த விதம், சிறுமியின் பிரேத பரிசோதனையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு தொடர்ந்தும் அவர் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளான விதம் மற்றும் அவருக்கு பல கட்டுப்பாடுகளை விதித்து துன்புறுத்தி அவரை மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார்களா? என்ற விடயங்களை முக்கியமாக கொண்டு மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.
இது தொடர்பில் இது வரை முன்னாள் அமைச்சர் ரிசார்டின் மனைவி, மாமனார், சிறுமியை அழைத்துவந்த தரகர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பிலும், விசாரணைகள் பற்றியும் பலதரப்பினரும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். எவ்வாறிருப்பினும் இது தொடர்பாக விரிவான விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கவே நம் எதிர்பார்க்கின்றோம் என அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.