பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள ஹிஷாலினியின் மரணம்! இன்று தோண்டி எடுக்கப்படவுள்ள சடலம்
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய நிலையில் உயிரிழந்த 16 வயதான சிறுமியின் சடலம் இன்று மீளவும் தோண்டியெடுக்கப்படவுள்ளது.
நீதிமன்றில் உத்தரவுக்கு அமைய சடலம் மீண்டும் தோண்டியெடுக்கப்படவுள்ளது.
கடந்த 3ம் திகதி தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 16 வயதான ஜூட் குமார் ஹிஷாலினி என்ற சிறுமி 12 நாட்களின் பின்னர் உயிரிழந்தார்.
குறித்த சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தபட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பில் ரிஷாட் பதியுதீனின் மனைவி, மாமா மற்றும் சிறுமியை வேலைக்கு அழைத்து வந்த தரகர் என பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறுமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி மீள் பிரேத பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், கொழும்பு − புதுகடை நீதவான் நீதிமன்றம் சடலத்தை மீளவும் தோண்டி எடுத்து மீள் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டது.
இதன்படி, உயிரிழந்த சிறுமியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு − புதுகடை நீதவான் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய குறித்த சடலம் தோண்டி எடுக்க உத்தரவிட்டுள்ளநிலையில், சிரேஷ்ட சட்டத்தரணி ஹன்ஷா அபேவர்த்தன நேற்று நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் சிறுமி ஹிசாலியின் உடலை தோண்டி எடுக்க அனுமதி கோரி மனு ஒன்றினை சமர்பித்தார்.
குறித்த மனுவை பரிசீலித்த நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி லூஷா குமாரி தர்மகீர்த்த சிறுமியின் உடலை விசேட வைத்திய குழுவினர் முன்னிலையில் சுகாதார விதிமுறைகளை பேணி தோண்டி எடுக்க அனுமதி வழங்கினார்.
அந்த வகையில் இன்றைய தினம் சடலம் மீளவும் தோண்டியெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.