பொலிஸ் மா அதிபருக்கு காலக்கெடுவுடன் உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றம்
பிரச்சினைகள் தொடர்பான விசாரணைகளை நடத்துவது தொடர்பான ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்குவதற்கு ஒரு குழுவை அமைக்குமாறு, பொலிஸ்மா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது.
நீதியரசர்கள் யசந்த கோதாகொட மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் கொண்ட அமர்வின் போது குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், சட்டமா அதிபர் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரால் பரிந்துரைக்கப்பட்டவர்கள் இருக்க வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு
பிரச்சினைகள் தொடர்பான விசாரணைகளில் சர்ச்சைக்குரிய தரப்பினரைப் பிரதிநிதித்துவப்படுத்துவடுடன் சட்டத்தரணிகளின் பங்கேற்பை இந்த கட்டமைப்பானது உள்ளடக்கும்.
அத்துடன் சந்தேகநபர்கள் பொலிஸ் காவலில் இருக்கும்போது ஒரு சட்டத்தரணியையும் இந்த குழு அனுமதிக்கும்.
இந்த நிலையில் குறித்த குழுவை அமைப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 2023, மார்ச் 23ஆம் திகதிக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
காணி சர்ச்சை தொடர்பான விசாரணை
நுகேகொட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உட்பட பல சிரேஷ்ட அதிகாரிகளினால் பொரலஸ்கமுவ பொலிஸ் நிலையத்தில் தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக சட்டத்தரணி மல்கா தெனெதி தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2021 நவம்பர் 13, அன்று பொரலஸ்கமுவ பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற காணி சர்ச்சை
தொடர்பான விசாரணையின் போது தனது வாடிக்கையாளர் சார்பாக தனது தொழில்முறை
சேவைகளை வழங்குவதில் இருந்து தாம் தடை செய்யப்பட்டதாக மனுதாரர் குற்றம்
சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.