ஹெரோயின் விற்ற மொட்டுக்கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் கைது
ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படும் உக்குவளை பிரதேச சபையின் பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் மாத்தளை களுதாவளை நரிகந்த பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினரிடம் இருந்து 2 ஆயிரத்து 600 மில்லி கிராம் ஹெரோயினும் பெண்ணொருவரிடம் இருந்து 2 ஆயிரத்து 500 மில்லி கிராம் ஹெரோயினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர் ஏற்கனவே பல குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்
சந்தேக நபரான பிரதேச சபை உறுப்பினர் இதற்கு முன்னரும் கொள்ளை உட்பட வேறு குற்றச்செயல்கள் காரணமாக கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டவர்.
அவருக்கு எதிராக சிறார் வன்புணர்வு தொடர்பில் மேல் நீதிமன்றத்தில் வழக்கொன்றும் நிலுவையில் இருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சந்தேக நபர் நரிகந்த பிரதேசத்தில் தலைமறைவாக இருந்து ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.