நீடிக்கும் மழை - இலங்கையின் அடுத்து வரும் சில நாட்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
இன்று முதல் எதிர்வரும் 16ஆம் தேதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வானிலை சீரான நிலைமையில் காணப்படும் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
எனினும் ஒரு சில பகுதிகளில் அவ்வப்பொழுது மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புகள் காணப்படுகின்றது.
காற்றுச் சுழற்சி
அதேபோல மத்திய, ஊவா, சப்ரகமுவ, தெற்கு மற்றும் மேற்கு மாகாண பகுதிகளில் அவ்வப்பொழுது மழை கிடைக்கும் சாத்தியமுள்ளது. அதேவேளை எதிர்வரும்16ம் திகதி தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் சிறிய அளவிலான காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது.
இதனால் எதிர்வரும் 16ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
ஒரு சில இடங்களில் மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் வடக்கு, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ,ஊவா, வடமத்திய, மாகாணங்களில் கன மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் தொடர்ச்சியாக மழை கிடைத்து வருகின்றது. இதனால் சில இடங்களில் நிலச்சரிவு நிகழ்வுகளும் பதிவாகியுள்ளன. இந்த நிலைமையில் எதிர்வரும் 16.12.2025 முதல் 19.12.2025 வரை இப்பிரதேங்களில் கன மழை வாய்ப்பும் உள்ளது.

எனவே இந்த நாட்களிலும் நிலச்சரிவைத் தூண்டும் கனமழை கிடைக்கும் என்பதனால் மக்கள் நிலச்சரிவு தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம்.
நிலச்சரிவு அபாயம்
நிலச்சரிவு அபாயத்தின் காரணமாக வெளியேற்றப்பட்டு தற்போது பாதுகாப்பான இடங்களில் உள்ள மக்கள் மேற்குறிப்பிட்ட இந்த நாட்களிலும் பாதுகாப்பான இடங்களில் இருப்பதே சிறப்பு.
இன்றைய நிலையில் நாட்டின் பல பிரதேசங்களிலும் உள்ள பெரும்பாலான நீர்த்தேக்கங்கள் வான் பாய்கின்றன. இந்த டிசம்பர் மாதம் முடியும் வரையில் அவ்வப்போது மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

அதிலும் குறிப்பாக 16-19, 23-29 ம் திகதிகளில் நாடு முழுவதும் மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
ஆகவே நீர்த்தேக்கங்களின் நிர்வாகத்தோடு தொடர்புடையவர்கள் இந்த மழை நாட்களைக் கருத்தில் கொண்டு செயற்படுவது சிறந்தது.
அத்தோடு தற்பொழுது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் நிலவுகின்ற குளிரான வளிமண்டல நிலைமை எதிர்வரும் 16ஆம் திகதி வரைக்கும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகவே மக்கள் இது தொடர்பாகவும் விழிப்பாக இருப்பது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.
கில்லியை ஓரங்கட்டி முதல் நாள் ரீ-ரிலீஸ் வசூலில் மாஸ் காட்டிய ரஜினியின் படையப்பா... தெறிக்கும் வசூல் Cineulagam