எதிர்வரும் வாரங்களில் தீவிரமடையும் நிலைமை! தேவையின்றி வீட்டிலிருந்து வெளியே வருவதை தவிர்க்குமாறு எச்சரிக்கை
பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பத்துடனான காலநிலை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கக்கூடும் என்பதால் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று (26.03.2026) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
வெப்பத்தின் தாக்கம்
அவர் மேலும் தெரிவிக்கையில், குறிப்பாக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சூரியன் இலங்கைக்கு நேராக உச்சத்திருப்பதாலும், உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றங்களினாலும் இம்முறை வெப்பத்தின் தாக்கம் அதிகத்துள்ளது. எதிர்வரும் வாரங்களில் இந்த வெப்ப நிலை மேலும் தீவிரமடையும் என வானிலை ஆராய்சி மத்திய நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
ஆகையால் பொதுமக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளின் போது வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க அதிக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக காலை 11.00 மணி முதல் மாலை 3.00 மணி வரையிலான காலப்பகுதியில் சூழலில் அதிக வெப்பம் நிலவுவதால், அத்தியாவசிய தேவைகளின்றி வீட்டிலிருந்தோ அல்லது கட்டடங்களில் இருந்தோ வெளியில் வந்து நடமாடுவதை தவிர்ப்பது நல்லது.
உடலில் ஏற்படுக்கூடிய நீரிழப்பைத் தடுக்க அதிகளவு நீர் அருந்த வேண்டும். சாதாரண நீரை விடவும் ஜீவனி அல்லது உப்பு கலந்த திரவ ஆகாரங்களை உட்கொள்ளலாம். மேலும் கடும் வெயிலில் வேலை செய்பவர்கள் வெப்பத்தைப் பிரதிபலிக்கக்கூடிய வெள்ளை அல்லது இளநிறத்திலான ஆடைகளை அணிவதுடன், தொப்பிகளைப் பயன்படுத்துவதன் வியர்வை வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தலாம்.

அதிக அவதானம் செலுத்த வேண்டும்
தற்போது பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிகள் மற்றும் இல்ல விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருவதால் சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் குறித்தும் அதிக அவதானம் செலுத்த வேண்டும். நீண்ட நேரம் வெயிலில் இருப்பவர்களுக்குத் தசைப்பிடிப்பு, வாந்தி அல்லது மயக்க நிலை போன்ற அறிகுறிகள் தென்படின் உடனடியாக தகுதியான வைத்தியரை நாடுமாறு கோருகிறேன்.
சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் நீரிழிவு, சிறுநீரக பாதிப்பு போன்ற நீண்டகால நோய்களுக்காக சிகிச்சை பெறுபவர்களும் இந்த வெப்பமான காலநிலையால் பாதிக்கப்படக்கூடிய அபாயம் உள்ளது. ஆகையால் பாடசாலை விளையாட்டு நிகழ்வுகளைத் திட்டமிடும் போது முறையான மருத்துவ வசதிகளுடன் அவற்றை முன்னெடுப்பது பாடசாலை நிர்வாகத்தினரின் பொறுப்பாகும் என்றார்.
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan