பவித்ராவுடனான பேச்சு தோல்வி - சுகாதாரத் தொழிற்சங்கங்கள் இன்று பணிப் பகிஷ்கரிப்பில்
இலங்கையில் அனைத்து சுகாதார சேவை தொழிற்சங்கங்களும் இன்று பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன.
இன்று காலை 7.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியுடன் நடைபெற்ற பேச்சு வெற்றியளிக்காத நிலையில், தாம் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதாக அனைத்து இலங்கை சுகாதார தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சருடனான பேச்சில் தமது முக்கியமான கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு, தீர்வு வழங்க சுகாதார அமைச்சர் தவறிவிட்டார் என்றும் சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டாலும், கோவிட் தொற்று மற்றும் அத்தியாவசிய சேவைகள் வழங்கப்படும் என்றும் அனைத்து இலங்கை சுகாதார தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
கோவிட் தடுப்பு கடமைகளுக்கு இலவசப் போக்குவரத்து வசதிகளை வழங்குதல், மருத்துவரர் அல்லாத சுகாதார ஊழியர்களுக்கு நியாயமான கொடுப்பனவை வழங்குதல், சுகாதாரத்துறை வெற்றிடங்களைப் பூரணப்படுத்த புதிய நியமனங்களை வழங்குதல் போன்ற கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ளன.
எவ்வாறெனினும் கோவிட்- 19 நோய்த் தொற்றாளிகளுக்கு சிகிச்சை அளிக்கு நடவடிக்கைகள் தொடரும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.