கொரோனா மரணங்கள்!அரசாங்கம் தனது நிலைப்பாட்டை விரைவில் அறிவிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிப்பு
கொரோனாவினால் மரணமாவோரின் உடலங்களை அடக்கம் செய்வது தொடர்பான விடயத்தில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை விரைவில் அறிவிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.
அடக்கம் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் இயக்குநர் வைத்திய கலாநிதி பாலித கருணாபெம தெரிவித்தார்.
இதனையடுத்து இந்த விவகாரத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மிக விரைவில் சுகாதார அமைச்சர் அறிவிக்க உள்ளார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை அகற்றுவது தொடர்பான பிரச்சினையை ஆய்வு செய்ய சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழு, அடக்கம் மற்றும் தகனம் ஆகிய இரண்டையும் பரிந்துரைத்துள்ளது.
கொரோனா வைரஸால் மரணமாகும் முஸ்லிம்கள் கட்டாயமாக தகனம் செய்யப்படுவதை முஸ்லிம்கள் ஆட்சேபித்ததை அடுத்து இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்ய இந்த குழு நியமிக்கப்பட்டது.
குறிப்பிட்ட பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்கும் போது,தகனம் மற்றும் அடக்கம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கும் வகையில் உடல்களை அகற்றுவதற்கான பரிந்துரைகளை இந்த நிபுணர் குழு அறிவித்துள்ளது.
அடக்கம் செய்யப்பட்ட பின்னர் நீர் மாசுபடுவதன் மூலம் வைரஸ் பரவுகிறது என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்றும் குழு கூறுகிறது.