சுகாதார பரிசோதகர் ஒருவர் தாக்குதலுக்கு இலக்கானதாக தெரிவித்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதி
வவுனியா சாந்தசோலை பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த சுகாதார பரிசோதகர் ஒருவர் தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சுகாதார பரிசோதகர் நேற்றையதினம் மாலை சாந்தசோலை பகுதியில் கடமை நிமிர்த்தம் சென்றிருந்தார்.
இதன்போது முகக்கவசத்தை சீரான முறையில் அணியாமல் வீதியால் இளைஞர் ஒருவர் சென்ற போது அதனைச் சீராக அணியுமாறு சுகாதார பரிசோதகர் எச்சரித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த இளைஞர் சுகாதார பரிசோதகரைத் தாக்கியதாக தெரியவருகிறது என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவத்தில் காயமடைந்துள்ளதாகத் தெரிவித்து சுகாதார பரிசோதகர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
வவுனியா – சாந்தசோலை பகுதியில் பொதுச்சுகாதார பரிசோதகர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் சந்தேக நபரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
முகக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவரை பொதுச் சுகாதார பரிசோதகர் எச்சரித்தபோது அதனைக் கவனத்திற் கொள்ளாத இளைஞர் பொதுச்சுகாதார பரிசோதகரைத் தாக்கியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
25 வயதுடைய இளைஞரே ஒருவரே இவ்வாறு பொதுச் சுகாதார பரிசோதகரைத் தாக்கியுள்ளதாகத் தெரியவந்துள்ளதுடன், அவரை தற்போது கைது செய்து மேலதிக நடவடிக்கையினை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன், அரச உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவிக்கும் நபர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வவுனியா பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.