முற்றுமுழுதாக முடங்கியது யாழ்ப்பாணம்! வெறிச்சோடி போன பல பகுதிகள் (video)
யாழ்ப்பாண மாவட்டத்தில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள், சந்தைகள் யாவும் மூடப்பட்டுள்ள நிலையில் பொது மக்களின் நடமாட்டத்தை ஆங்காங்கே அவதானிக்க முடிவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
அரசாங்கத்தினால் கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்படும் பௌத்த மயமாக்கல் மற்றும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏழு தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து வடக்கு கிழக்கில் இன்றைய தினம் முழுமையான கடையடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தன.
இதற்கு பலரும் தமது ஆதரவை தெரிவித்துள்ளதுடன், யாழ்ப்பாணத்தில் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சேவைகள் வழமை போல் இடம்பெறுகின்றன. எனினும் தனியார் பேருந்து சேவைகள் இயங்கவில்லை.
முச்சக்கரவண்டி சேவையும் யாழ். நகரில் இடம்பெற்று வருவதுடன் பொதுமக்கள் அங்காங்கே வீதிகளில் நடமாடுவதை அவதானிக்க முடிகின்றது. மேலும் சில உணவகங்கள் மற்றும் மருந்தகங்கள் உட்பட அத்தியாவசிய சேவைகள் யாவும் வழமை போல் செயற்படுகின்றது.
எனினும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வர்த்தக நிலையங்கள் சந்தைகள் யாவும் மூடப்பட்டு வர்த்தகர்கள் தமிழ் கட்சிகளினால் அழைப்பு விடப்பட்ட கடைடைப்பிற்கு பூரண ஆதரவினை வழங்கியுள்ளனர். மேலும் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழக செயற்பாடுகளும் ஸ்தம்பித்து உள்ளதை அவதானிக்க முடிவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
செய்தி - தீபன்
மூன்றாம் இணைப்பு
தமிழர்களது வாழ்விடங்கள் மற்றும் தொல்லியல் சொத்துக்கள் அழிப்பிற்கு எதிராகவும், அரசாங்கம் கொண்டு வர இருக்கின்ற புதிய பயங்கரவாத தடுப்பு சட்டத்திற்கு எதிராகவும் முன்னெடுக்கப்படும் முழு கதவடைப்பு போராட்டம் காரணமாக இன்று பருத்தித்துறை நகரும் முற்று முழுதாக முடங்கியுள்ளது.
இதேவேளை அப்பகுதியில் ஒரே ஒரு உணவகம் மாத்திரமே திறந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இலங்கை போக்குவரத்து சபையின் போக்குவரத்து இடம்பெறும் போதும் வர்த்தக நிலையங்கள், மரக்கறி மீன் சந்தை உட்பட அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
மேலும் மக்கள் நடமாட்டமும் குறைவாகவே காணப்படுவதாக தெரியவருகிறது.
செய்தி - எரிமலை
இரண்டாம் இணைப்பு
பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராகவும் தமிழர்களின் பாரம்பரிய இன, மத அடையாளங்கள் அழிக்கப்படுவதற்கு எதிராகவும் வடக்கு, கிழக்கில் இன்றைய தினம் நிர்வாக முடக்கல் போராட்டம் மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவை வழங்கியுள்ளனர்.
இவ்வாறான சூழலில் யாழ்ப்பாண மாவட்டத்தின் பல பகுதிகள் வெறிச்சோடி போயுள்ளதாக தெரியவருகிறது.
மூடப்பட்டுள்ள வர்த்தக கட்டடங்கள்
சாவகச்சேரி, கொடிகாமம், மந்திகை உள்ளிட்ட பகுதிகளின் பிரதான சந்தைகள் வர்த்தக கட்டட தொகுதிகள் அனைத்தும் முற்றாக மூடப்பட்டுள்ளன.
அதேபோல் தனியார் போக்குவரத்துக்கள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை பல பாடசாலைகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வரவு குறைந்த நிலையிலேயே காணப்படுவதாகவும் தெரியவருகிறது.
அத்துடன் சங்கானை, மானிப்பாய் போன்ற பகுதிகளிலும் வர்த்தகர்கள் கடைகளை அடைத்து ஆதரவு வழங்கியுள்ளதாக குறித்த பகுதிகள் முடங்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலதிக செய்தி - எரிமலை, கஜிந்தன்
முதலாம் இணைப்பு
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் உட்பட அரசாங்கத்தின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளுக்கு எதிராக ஒன்றிணைந்து செயற்படுவதற்கு எதிர்க்கட்சிகள் இணக்கத்துக்கு வந்துள்ளன.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, சுதந்திர மக்கள் சபை (டலஸ் அணி), உத்தர லங்கா சபாகய (விமல் அணி), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி, அநுர பிரியதர்சன யாப்பா அணி ஆகியவற்றின் உறுப்பினர்கள் இந்தச் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
இந்தச் சந்திப்பில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவைத் தோற்கடிப்பதற்கும், அதற்குப் பதிலாக புதியதொரு சட்ட வரைவை அறிமுகப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கை உள்ளிட்ட விவகாரங்கள் பற்றியும் இதன்போது பேசப்பட்டன.
செய்தி - ராகேஷ்














6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு ஆளே மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam
