இலங்கையில் சிறுபான்மையினருக்கு எதிரான மத துன்புறுத்தல்கள்! அமெரிக்காவின் அறிக்கையில் தகவல்
2022ஆம் ஆண்டு இலங்கையில் சிறுபான்மையினருக்கு எதிரான மத துன்புறுத்தல்கள் குறித்து அமெரிக்கா மதங்கள் தொடர்பான தனது வருடாந்த சுயாதீன அறிக்கையில் தகவல்களை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் இன, மத அடிப்படையில், சிறுபான்மையினரை மதித்து நல்லிணக்க செயற்பாட்டின் ஒரு அங்கமாக மத சுதந்திரத்தை உள்ளடக்க வேண்டியதன் அவசியத்தை, இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகளுடனான சந்திப்புகளின் போது, கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம், வலியுறுத்தியதாக சர்வதேச மத சுதந்திரம் தொடர்பான வருடாந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
அரச அதிகாரிகளுடன் சந்திப்பு
சிறுபான்மை மத குழுக்களின் உறுப்பினர்களை அரசாங்கம் துன்புறுத்துவது மற்றும் பாகுபாடு காட்டுவது குறித்து அதிருப்தி தெரிவிக்கவும், நீண்ட காலமாக தடுப்புக்காவலில் உள்ளவர்களுக்கு, குறிப்பாக காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய நடைமுறையை உறுதி செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதற்காகவும், தூதரகம் மற்றும் வருகை தரும் இராஜாங்க திணைக்கள அதிகாரிகள் அரசாங்க அதிகாரிகளைச் சந்தித்தனர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரும், இராஜதந்திர வாதங்கள் மற்றும் பொது அறிக்கைகள் மற்றும் உரைகள் மூலம் மத சுதந்திரத்தை ஊக்குவித்ததாக அமெரிக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம், வடக்கிற்கான பயணம் மற்றும் பல்வேறு மதங்களைச் சேர்ந்த மதத் தலைவர்களுடனான சந்திப்புகளுக்கு பிறகு, தூதுவர் ஒரு செய்திக் குறிப்பில் மத பன்மைத்துவத்தின் மதிப்பை வலியுறுத்தியிருந்தார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.