புல்மோட்டை பகுதியில் உயிரிழந்த நபரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பச்சைப்புல்மோட்டை பகுதியில் கடந்த 10 ஆம் திகதி மீட்கப்பட்ட சடலம் பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னர் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஆனந்தபுரம் கிராமத்தில் இருந்து 09.06.21 அன்று இரவு நந்திக்கடலுக்கு தொழிலுக்கு சென்றவரை காணவில்லை என உறவினர்கள் தேடியுள்ள நிலையில் 10.06.21 அன்று மாலை பச்சைப்புல்மோட்டை பகுதியில் சடலமாக மீட்க்கப்பட்டார்.
குறித்த நபர் நந்திக்கடலுக்கு செல்லும் வீதியினை விட்டு பற்றை ஒன்றிற்கு அருகிலேயே சடலமாக காணப்பட்டுள்ளார். இவரது உயிரிழப்பு தொடர்பில் குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இவரது உயிரிழப்பு தொடர்பிலான விசாரணை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் இடம்பெற்றுள்ளதுடன், இவரின் உயிரிழப்பு தொடர்பில் மன்றிற்கு அறிக்கையிடுமாறு மாவட்ட நீதவான் பணித்துள்ளார்.
கடந்த 10 ஆம் திகதி உடற்கூற்று பரிசோதனைக்காக குறித்த சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்துசெல்லப்பட்டிருந்த நிலையில், அங்கு உயிரிழந்தவருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதன் அடிப்படையில் குறித்த சடலத்தில் கோவிட் தொற்று இல்லை என்று பெறுபேறு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை,உயிரிழந்த நபரின் மூளையில் இரத்த குழாய் வெடித்த காரணத்தினாலயே மரணம் நிகழ்ந்துள்ளதென சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.