குருக்கள்மடத்தில் மனிதப்புதைகுழி வழக்கில் நீதி மன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு - சட்டத்தரணி விளக்கம்
கடந்த 1990ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியில் புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இடம்பெற்றுள்ளது.
இந்த விசாரணை இன்று(20.04.2026)களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருக்கள்மடம் புதைக்குழி விவகாரம்
இதன்போது வழக்கில் முன்னிலையாகிய சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில்,
குருக்கள்மடம் சந்தேகத்துக்கிடமான இந்த மனிதப் புதைக்குழி தொடர்பான வழக்கு திங்கட்கிழமை (20.04.2026) களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

இந்த வழக்கிலே கடந்த 31.03.2026 ,அன்று இந்த வழக்கினுடைய பிரத்தியசக முறைபாட்டாளர் நீதிமன்றில் நகர்த்தல் பிரேரணை வாயிலாக அணுகி அப்பகுதியில் அடையாளம் காணப்பட்ட மூன்று இடங்களிலே இரண்டு இடங்கள் மாத்திரம் ஸ்கேன் பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் ஒரு இடம் ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை எனவும் அந்த குறித்த பிரதேசத்தை ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் அதனை அகழ்வு நடவடிக்கைகளுக்கு உட்படுத்துவதற்குரிய கட்டளை ஆகுமாறும் நீதிமன்றை வேண்டி இருந்தார்.
அதன் அடிப்படையில், குறித்த அந்த ஸ்கேனிங் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான இந்த வழக்கினுடைய பிரத்தியசக முறைப்பாட்டாளர் தனது சொந்த செலவில் இருந்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தனியார் நிறுவனம் ஒன்றை அணுகி அந்த ஸ்கேன் பரிசோதனையை ஆடியோ ஃப்ரீக்குவன்சி மெக்கானிக் டெலிவரி எனும் ஸ்கேன் பரிசோதனையை நடைமுறையை பின்பற்றி குறித்த ஸ்கேனிங் செய்யப்படாத பிரதேசத்தை ஸ்கேன்கனிங் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கும், அதன் பின்னர் அங்கே ஏதாவது எச்சங்கள் காணப்படுமாக இருந்தால் அதனை அகழ்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இன்று நீதிமன்றில் கட்டளை ஆக்கப்பட்டிருக்கின்றது.
ஸ்கேனிங் நடவடிக்கைக்கான திகதி அறிவிப்பு
குறித்த இந்த வழக்கிலே சட்ட வைத்திய அதிகாரி, காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம், தொல்லியல் திணைக்களம், குற்றத்தடுப்பு பிரிவு, என வழக்கோடு தொடர்பற்ற சகல தரத்தவர்களுக்கும் அறிவித்தல் அனுப்பப்பட்டிருக்கின்றது.
அந்த வகையில், அடையாளம் காணப்பட்டு ஸ்கேனிங் சோதனைகளுக்கு உட்படுத்தப்படாத அந்த பிரதேசத்திலே எதிர்வரும் மே மாதம் 14, 15,16 மற்றும் 17 திகதிகளில் ஸ்கேனிங் நடவடிக்கைகளை மற்றும் ஏதாவது எச்சங்கள் இருக்குமாக இருந்தால் அதனை அகழ்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த வழக்கில், குறித்த நடவடிக்கைகள் அனைத்தும் இந்த வழக்கின் பிரத்தியட்சக முறைப்பாட்டாளர் அவரது சொந்த செலவினத்திலேயே மேற்கொள்வதற்கு நீதிமன்று அதற்குரிய கோதாவினை ஆக்கி இருக்கின்றது.
மேலும், வழக்கு விசாரணை மீண்டும் எதிர்வரும் 14ஆம் திகதி அழைக்கப்பட இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.