ஒடுக்கப்படுகின்ற தேச மக்களே ஒன்று கூடுங்கள்! டக்ளஸ் விடுத்துள்ள அழைப்பு
"உழைக்கும் மக்களின் வாழ்வில் நிரந்தர விடியல் பிறக்கவும், சகல இன மத சமூக மக்களும் சமவுரிமை பெற்ற நிமிர்ந்தகாலம் நிலைக்கவும் தொடர்ந்தும் உறுதியுடன் உழைப்போம்"என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது வாழ்த்தினை மேதின செய்தியில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது "உலகத்தொழிலாளர்களே, ஒடுக்கப்படுகின்ற தேச மக்களே ஒன்று படுங்கள் என்ற மேதின அறை கூவலை ஏற்று நாமும் அன்று எமது தேச விடுதலை போராட்டத்தின் வழி நின்று உழைக்கும் மக்களின் உரிமைக்காகவும் எழுச்சி கொண்டவர்கள்.
எவரும் எவரையும் அடிமை என்று கொள்ளாத சமத்துவ தேசத்தை வென்றிட புரட்சிகர இலட்சியக் கனவோடு நாம் நீதியான போராட்டக்களத்தில் நின்றவர்கள்.
உரிமை போராட்டம்
நீதியான எமது உரிமை போராட்டம் சகோதர இயக்கங்கள் மீதான மேலாதிக்க வன்முறைகளாலும் நாம் வெறுக்கும் உள்ளியக்க படுகொலைகளாலும், அநீதியான அழிவு யுத்தமாக மாறிய போது தீர்க்க தரிசனமாக எமது இலட்சிய பாதையை நாம் மாற்றியவர்கள்.
ஆனாலும் பயணத்தை நிறுத்தவில்லை எந்த இலட்சிய கனவுகளுக்காக நாம் அன்று போராட எழுந்தோமா அதே இலட்சிய கனவுகளுடனே நாம் வகுத்த தேசிய நல்லிணக்க பாதையிலும் தொடர்ந்தும் உழைத்து வருகின்றோம்.
எமக்கு கிடைத்த அரசியல் பலத்திற்கு ஏற்ற வகையில் முடிந்தளவு எமது மக்களுக்கான வெற்றிகளையும் அடைந்து வருகின்றோம்.
அரசியலில் சுதந்திரம், பொருளாதாரத்தில் சமத்துவம்,சமூகத்தில் சகோதரத்துவம், இத்தகைய நாகரீக தேசத்தை உருவாக்கவே நாம் நடைமுறையில் உழைத்து வருகின்றோம்.
உழைக்கும் மக்களின் பெயராலும், தமிழ் தேசிய இனத்தின் பெயராலும் வெறுமனே கூச்சலிடுவதால் எந்த கோட்டையின் கதவுகளும் திறக்காது.
சமத்துவ உரிமையற்ற சமரசம்
இன மத சமூக முரண்பாடுகளை வெறுமனே அறிக்கையிட்டு அதில் குளிர்காய்ந்து அர்த்தமற்ற அரசியல் நடத்துவதால், இருப்பதை விடவும் எல்லா பிரச்சினைகளும் கொழுத்து கூர்மையடையுமே தவிர நீதி ஒருபோதும் கிடைக்காது.
அதற்காக, எவரும் எவரிடமும் சரணாகதி அடைவதென்றோ, சமத்துவ உரிமையற்ற சமரசங்களுக்கு செல்வதென்றோ அர்த்தமல்ல கால மாற்றமும், சூழல் மாற்றமும், எமக்கு புதிய அனுபவங்களை கற்றுத்தந்திருக்கிறது.
அரசியல் அதிகாரங்களை வென்றெடுப்பதின் ஊடாக உழைக்கும் மக்களோ, அன்றி எமது இன மத சமூக மக்களோ எவரிடமும் கையேந்தி வாழாத காலச்சூழலை நாம் படிப்படியாக உருவாக்கவே உழைத்து வருகின்றோம்.
மக்களின் பிரச்சினைகள்
அரசியல் பலம் போதிய அளவு எமக்கு கிடைதிருந்தால் எமது மண்ணில் இன்னமும் அதிக மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும், நீரில் வாழும் மீன்களைப்போல் நாமே என்றும் மக்கள் மத்தியில் நீங்காதிருப்பவர்கள் மற்றும் மக்களின் பிரச்சினைகள் சகலதையும் ஆழ்மன உணர்வுகளில் நாமே ஏந்தியிருப்பவர்கள்.
உழைப்பவர் இடர் தீர,வறியோர் வாழ்வுயர, நிலமற்றோர், வீடற்றோர் நிலை மாற சமூக சமத்துவ நீதி நிலவ பெண்களின் சமவுரிமை வெல்ல வேலையற்ற இளைஞர் யுவதிகளின் தேவைகள் நிறைவேற எல்லோரும் எல்லாமும் பெற்று சரிநிகர் சமனென்ற நிமிர் வாழ்வு மலர தொடர்ந்தும் உறுதியுடன் உழைப்போம்.
அன்றாட தேவைகளின் தீர்விற்கும், அபிவிருத்தியில் தமிழ் தேசத்தின் மலர்ச்சிக்கும், அரசியலுரிமையில் எம் மக்களின் நிரந்தர மகிழ்ச்சிக்கும், தேசிய நல்லிணக்க வழி நின்று தொடர்ந்தும் செல்வோம் நாம் செல்லும் பயணம் வெல்லும்.
தமிழ், முஸ்லிம், சிங்கள உழைப்பவர் ஒற்றுமை ஓங்கட்டும்
உழைக்கும் மக்களின் உரிமைகள் வெல்லட்டும் தமிழ் பேசுவோர் தேசம் தலை நிமிரட்டும், இன, மத , சமூக சமத்துவ நீதி நிலவட்டும்"
இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
