காய்கறிகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் நிலைமை
சுற்றுலாத்துறை துறைக்குத் தேவையான காய்கறிகளுக்கு தற்போது தட்டுப்பாடு நிலவுவதால், எதிர்வரும் நாட்களில் சுற்றுலா தொழிற்துறைக்கும் பெரிய பாதிப்பு ஏற்படலாம் என நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் செயலாளர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் இன்று கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
கோவிட் தொற்று நோய் காரணமாக சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்துள்ளது. நாடு தற்போது வழமைக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றது. சுற்றுலா விடுதிகள் திறக்கப்பட்டு வருகின்றன.
வெளியிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வர ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவைத் தயாரிப்பதற்கான காய்கறிகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது.
உதாரணமாக ஐஸ்பேர்க், தையிம், பாஸ்லி, செல்திரி, புரோக்கோலி, பெஃனல், பெசில், ஹர்பிஸ், பெல்பெப்பர் போன்ற காய்கறிகளுக்கு, இரசாயன பசளை மற்றும் கிருமி நாசினிகள் இல்லாததால் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தற்போது ஒரு கிலோ கிராம் லீக்ஸ் 200 ரூபாவுக்கும், உருளைக்கிழங்கு 180 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. தேவையான நேரத்தில் பசளைகள் கிடைக்காததே இதற்கு காரணம்.
இன்னும் சில மாதங்களில் காய்கறிகளைத் தேடிப்பிடிக்க முடியாமல் போகும் நிலைமை ஏற்படும். சுற்றுலாத்துறையினருக்குத் தேவையான காய்கறிகள் பெரும்பாலும் வீட்டுத் தோட்டங்களில் விளைவிக்கப்படுகின்றன. அவற்றுக்குத் தேவையான விசேட பசளைகள் உள்ளன.
அவை தற்போது இலங்கையில் எங்குமில்லை. இதன் காரணமாக இந்த காய்கறிகளை விளைவிப்போர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். நத்தார் காலம் என்பது சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வரும் காலம். பசளைகள் இல்லாமையானது சுற்றுலா விடுதிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
அரசாங்கம் இரசாயன பசளைகள் மற்றும் கிருமி நாசினிகளை மீண்டும் இறக்குமதி செய்து, காய்கறி பயிர் செய்கைகளை வழமை நிலைமைக்குக் கொண்டு வர வேண்டும். அரசாங்கத்தில் இருப்போர் பெரிய நாற்காலிகளில் அமர்ந்து தீர்மானங்களை எடுக்கின்றனர்.
செயற்பாட்டு ரீதியான பக்கம் அவர்களுக்குத் தெரியாது. 1948 ஆம் ஆண்டு வெள்ளையர்கள் நாட்டை நம்மிடம் கையளிக்கும் போது, நாம் ஐந்து சதம் கூட கடனை பெற்றிருக்கவில்லை. தற்போது நாட்டில் வாழும் தனி நபர் ஒருவர் லட்சக்கணக்கில் கடனாளியாக மாறியுள்ளார்.
அரசியல் பலவீனமே இதற்கு காரணம். இதன் காரணமாகவே விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது என ருண சாந்த ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.