முல்லைத்தீவில் இடம்பெற்ற மாபெரும் நடைபவனி
முல்லைத்தீவு கடற்கரையில் சர்வதேச கடற்றொழிலாளர் தினத்தை முன்னிட்டு “சர்வதேச மீன்பிடியை ஒழித்து எமது உள்ளூர் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்போம்” என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வு நடைபவனி ஒன்று இடம்பெற்றுள்ளது.
சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட கரையோர இளைஞர்கள் இணைந்து நேற்றையதினம்(21.11.2025) காலை நடைபெற்ற இந்நடைபவனியில், கடல்சார் வளங்களை பாதுகாக்கவும், உள்ளூர் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தவும் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டுப்பிரசுரங்கள்
சட்டவிரோத கடற்றொழிலை இலங்கை அரசாங்கம் முற்றுமுழுதாக தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி நடைபவனியில் பங்கேற்ற இளைஞர்கள் முல்லைத்தீவின் இளம் கடற்றொழிலாளர்களுக்கு பாதுகாப்பான எதிர்காலம் வேண்டும், முல்லைத்தீவு கடற்கரையை காக்க சட்டவிரோத மீன்பிடியை நிறுத்தவும், கடலை பாதுகாப்போம் சட்டவிரோதத்தை தடுப்போம், எங்கள் பாரம்பரிய கடலில் உங்கள் சட்டவிரோத படகுகள் வேண்டாம் போன்ற பல்வேறு பதாதைகளை ஏந்தியவாறு நடைபவனியில் கலந்து கொண்டனர்.

நடைபவனியின் நிறைவில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டுப்பிரசுரங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், தயாரிக்கப்பட்ட மகஜர் ஊடகங்களுக்கு வாசித்து விளக்கப்பட்டதுடன் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபருக்கான மகஜரினை மாவட்ட செயலக பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தரிடம் அதிகார பூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நடைபவனியின் சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் இணை இணைப்பாளர்களான மதுசனா , சயந்தன் மற்றும் உத்தியோகத்தர்கள் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் சி.பிரதாஷ், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









