அரசாங்கம் 1557 பாடசாலைகளை மூட முயற்சிப்பதாக குற்றச்சாட்டு
அரசாங்கம் சுமார் 1557 பாடசாலைகளை மூடுவதற்கு முயற்சிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
ஐம்பது மாணவ மாணவியருக்கு குறைவாக கற்கும் பாடசாலைகளே இவ்வாறு மூடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைக்கு அமைய பாடசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரச ஊழியர்களை குறைப்பது என்ற சர்வதேச நாணய நிதியத்தின் யோசனையை நிறைவேற்றும் வகையில் பாடசாலைகளை மூடுவதற்கு திட்டமிடப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
குறித்த பாடசாலைகளைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு சைக்கிள் ஒன்றை ஊக்குவிப்பாக வழங்கி பாடசாலைகளை மூடுவதற்கு திட்டமிடப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாடசாலைகளை மூடுவதன் மூலம் குறித்த பாடசாலைகளில் கற்பிக்கும் 9830 ஆசிரியர்களை சேவையிலிருந்து நீக்குவதற்கு முயற்சிக்கப்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
பாலர் பாடசாலைகளில் பிள்ளைகளின் எண்ணிக்கை குறைவு என்பதற்காக அவற்றை மூட வேண்டியதில்லை எனவும் அமெரிக்காவில் கூட இவ்வாறு பாடசாலைகள் மூடப்படுவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து அரசாங்கம் எவ்வித பதிலையும் இதுவரையில் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
