அரசாங்கம் தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும்:நாட்டில் இப்படியான நிலைமை என்றும் ஏற்பட்டதில்லை
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை என்பது வரலாற்றில் என்றும் ஏற்படாத மிகவும் பாரதூரமான நிலைமை எனவும் நாட்டு மக்களின் அடிப்படை தேவைகளை கால நேரத்துடன் வழங்குவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது எனவும் ஆளும் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினரான அகுர பிரியதர்ஷ யாப்பா தெரிவித்துள்ளார்.
குருணாகல் பன்னல ஈரியகொல்லவில் உள்ள தனது இல்லத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
என்றும் ஏற்படாத வகையில் நாட்டின் வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளது. நாட்டின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது.
அரசாங்கம் தமது இயலாமையை ஒப்புக்கொள்ள வேண்டும். இதனால், ஏற்பட்டுள்ள மக்களின் அதிருப்தியை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். நகர்புற நடுத்தர மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தி தற்போது கிராமங்கள் வரை பரவியுள்ளது.
இதன் காரணமாகவே கடந்த சில வாரங்களாக தீப்பந்தங்களை ஏந்தியவாறு மக்கள் வீதியோரங்களில் எதிர்ப்புகளில் ஈடுபட்டனர். இவர்கள் வாழ்நாளில் போராட்டங்களுக்காக வீடுகளில் இருந்து வெளியில் வாரதவர்கள். பெண்கள் சிறிய குழந்தைகளை சுமந்துக்கொண்டிருந்தனர்.
இது சமூக ரீதியாக பாரிய பிரச்சினை. இலங்கைக்குள் எப்போதும் இப்படியான நிலைமை ஏற்பட்டதில்லை. இவ்வாறான நிலைமையில் அரசாங்கம் அவசர காலச் சட்டத்தை பயன்படுத்துவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.
இவற்றின் மூலம் மக்களின் கோபம் மேலும் அதிகரிக்குமே தவிர குறையாது. தாம் தோல்வியடைந்துள்ளோம் என்ற விடயத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போதே பிரச்சினைகளுக்கு தீர்வை காண முடியும்.
நாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் அரசாங்கம் எடுக்கும் அனைத்து முடிவுகளையும் கண்களை மூடிக்கொண்டு ஆதரிக்க தயாரில்லை. நாங்கள் ஜனநாயகமாக மக்கள் பக்கம் இருந்தே செயற்படுவோம்.
இந்த நேரத்தில் எந்த கட்சியை சார்ந்த நபர் என்று மக்கள் பார்க்க மாட்டார்கள். 225 பேரும் ஒரே மாதிரியானவர்கள் என்றே மக்கள் கூறுகின்றனர்.
அரசாங்கம் முதலில் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு, பிரச்சினைகளுக்கு தீர்வுகாண மிகவும் நிபுணத்துவமிக்க நபர்கள் அடங்கிய பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டும். அப்படி செய்தால், இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் எனவும் அனுர பிரியதர்ஷன யாப்பா மேலும் தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியா விமான விபத்து: மகிழ்ச்சியையும் சோகத்தையும் ஒரே நேரத்தில் அனுபவிக்கும் ஒரு குடும்பம் News Lankasri

ஏர் இந்தியா துயர சம்பவம்... ஒரு வாரத்திற்கு முன்பே விமான விபத்தை கணித்த இந்திய ஜோதிடர் News Lankasri
