நாட்டில் நடைப்பெறுகின்ற குற்றச்செயல்களில் அரசுக்கும் தொடர்புள்ளது! சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு
நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மற்றும் செம்மணிப் படுகொலை ஆகிய விடயங்கள் வெளிச்சத்திற்கு வரக்கூடிய ஒரு நிலையில் அதனைத் திசை திருப்புவதற்காகவே புத்தர் கோயிலைக் கட்டுகிறார்களோ என சந்தேகம் எழுவதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு - வாவிக்கரை வீதியில் உள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நம்பிக்கையில்லாத் தீர்மானம்
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தைத் தொடர்ந்து, நேற்று முன்தினம்(20.07.2026) நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் பேரவைத்தலைவரிடம் கையளிக்கப்பட்டது.
அது ஒருபக்கம் இருக்க, கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தினுடைய தூதுவர்கள் இன்று(22.07.2026) செம்மணிப் புதைகுழியை பார்வையிட்டுள்ளனர்.

அங்கு 450ற்கும் மேற்பட்ட உடலங்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது இவ்வாறிருக்க நேற்றைய தினம் திருகோணமலை - கன்னியா, வெந்நீரூற்றில் ஒரு புத்தர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இவற்றையெல்லாம் பார்க்கின்ற பொழுது உண்மை வெளிப்படுகின்ற சந்தர்ப்பத்தில் அரசாங்கம் அதனை மூடிமறைப்பதற்கான ஒரு செயலை செய்வதாகவே தோன்றுகிறது.
ஏற்கனவே கன்னியா விடயத்தைப் பொறுத்தவரையில், அங்கு கட்டுமானங்கள் எதுவும் செய்யக்கூடாது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புத்தர் கோயில்
அங்கு ஒரு புத்தர் கோயில் கட்டுவதற்காக நேற்றைய தினம்(21) அடிக்கல் நாட்டும் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனை பார்க்கின்ற பொழுது ஏற்கனவே இருந்த நீதிமன்ற ஆணைகளுக்கு அப்பாற்பட்டுச் சென்று, இராணுவமோ அல்லது புத்த பிக்குகளோ இதனை தங்களுடைய விருப்பத்திற்குச் செய்கிறார்களா, இல்லை அரசாங்கத்தினுடைய வழிகாட்டுதலின்படி இவை நடைபெறுகிறதா என்றொரு கேள்வி எழுகின்றது.

இவ்வளவு நாளும் இல்லாமல் திடீரென்று நேற்றைய தினம்(21) அதைக் கட்ட வேண்டிய ஒரு தேவை ஏன் ஏற்பட்டது? அத்துடன் செம்மணிப் புதைகுழி தொடர்பாகவும் ஒரு பன்னாட்டு நீதி கோரப்படுகிறது.
அரசாங்கம் நிச்சயமாக அதற்கு ஒரு தீர்வைக் கொண்டுவர மாட்டாது. ஏனென்றால் இந்த அரசாங்கத்திற்கும் அதில் ஒரு பங்கு இருக்கிறது என தெரிவித்துள்ளார்.