வவுனியாவில் மீண்டும் கோவிட் தொற்று பரவும் அபாயம்! சுகாதார பிரிவினர் எச்சரிக்கை
வவுனியா நகரசபை விளையாட்டு மைதானத்தில் இடம்பெறும் கிரிக்கெட் மற்றும் கால்பந்தாட்ட போட்டிகளினால் கோவிட் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் கு.திலீபன் தலைமையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கோவிட் -19 சூழ்நிலை காரணமாக விளையாட்டு நிகழ்வுகள் உட்பட பல விடயங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தவிர்க்க முடியாத சில காரணங்களினால் விளையாட்டு வீரர்கள் முகக்கவசமின்றியே விளையாட்டில் ஈடுபடுகின்றனர். இவர்களில் எத்தனை விளையாட்டு வீரர்கள் இரண்டு தடுப்பூசியினையும் பெற்றுக்கொண்டனர் என்ற விபரம் கூட தெரியவில்லை.
மேலும் பார்வையாளர்களும் அப்பகுதியில் குழுமி காணப்படுகின்றனர். இவ்விடயங்கள் காரணமாக கோவிட் -19 தொற்று பரவும் அபாய நிலை காணப்படுகின்றது. சுகாதார பிரிவினரின் அனுமதியின்றி வவுனியா நகரசபை விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் மற்றும் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி இடம்பெறுகின்றது.
நகரசபை மைதானத்தினை சூழ சுகாதார நடைமுறைகளை மீறி பார்வையாளர்கள் ஒன்று கூடி நிற்கின்றனர். மேலும் விளையாட்டு கழகங்கள் என பலரும் மைதானத்தினுள் பார்வையாளர்களாக அமர்ந்துள்ளனர்.
எனவே நகரசபையினர் சுகாதார விதிமுறைகளை மீறி செயற்பட்டால் சட்ட நடவடிக்கைக்கு செல்ல வேண்டிய நிலை உருவாகும் என சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.
இதனையடுத்து, பொலிஸாரின் உதவியுடன் நகரசபையினர் பார்வையாளர்கள் ஒன்று கூடுவதினை தவிர்க்க வேண்டும் எனவும், இனிவரும் காலங்களில் எந்தவொரு விளையாட்டு நிகழ்வும் சுகாதார பிரிவினரின் அனுமதியுடனே இடம்பெற வேண்டுமெனவும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரினால் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
இதேவேளை,வவுனியா மாவட்டத்தில் எதிர்வரும் 21 ஆம் திகதி பாடசாலைகளை மீள திறப்பது மற்றும் பாடசாலைகளின் சுகாதார நிலமை தொடர்பான கலந்துரையாடலில் ஆராயப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் நடைமுறையிலுள்ள கோவிட் சூழ்நிலையில் பாடசாலைகளைச் சுகாதார
வழிமுறைகளுக்கமைவாக ஆரம்பிப்பதற்கேற்ற பிரத்தியேகமான செயற்பாடுகள் தொடர்பான
விடயங்கள் ஆராயப்பட்டதுடன், நாடு தழுவிய ரீதியில் பாடசாலைகளைப் பாதுகாப்பான
முறையில் ஆரம்பிப்பது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள விசேட சுற்றுநிருபத்தின்
அடிப்படையில் சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கு அமைவாக ஆரம்பிப்பது
தொடர்பாகவும், வெளி மாவட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கடமைக்கு
திரும்புவது மற்றும் அவர்களுக்குரிய போக்குவரத்து வசதி தங்குமிடம் என்பன
தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.





அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
