வவுனியாவில் அதிகரிக்கும் கோவிட் தொற்றாளர்களின் நிலவரம்
வவுனியாவில் மேலும் 123 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில (08.09) இரவு வெளியாகின.
அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கோவிட் தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் 123 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை,வவுனியா, சாந்தசோலை கிராமம் கோவிட் தொற்று காரணமாக அபாய நிலையை அடைந்துள்ளதுடன் கிராமத்தில் 43 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, சாந்தசோலை கிராமத்தில் கோவிட் தொற்று அபாயம் இருப்பதாக கிராமத்தின் பொது அமைப்புக்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக சுகாதார பிரிவினரால் கடந்த சனிக்கிழமை சாந்தசோலை கிராமத்தில் அன்டிஜன் மற்றும் பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்படி, நோய் அறிகுறி காணப்பட்டவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 12 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மேலதிகமாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் இன்று இரவு வெளியாகின.அதில் 31 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த கிராமத்தில் 43 பேர் கோவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
கோவிட் அபாயமுள்ள கிராமாக குறித்த கிராமம் காணப்படுவதால் பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என சுகாதாரப் பிரிவினர் கோரியுள்ளனர்.