ஹரிணியை ஒதுக்கும் அரசு : சாமர சம்பத் வெளியிட்ட தகவல்
பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக அரசாங்கத்திற்குள் நடைபெறும் சூழ்ச்சிகளை சாமர சம்பத் தசநாயக்க வெளிப்படுத்தியுள்ளார்.
இரத்தினபுரியில் நேற்று (02.11.2025) நடைபெற்ற சுதந்திர கட்சியின் கூட்டத்தில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
பிரச்சினைகளில் சிக்கியுள்ள கட்சிகள்
தொடர்ந்து பேசிய அவர், ஆட்சி அதிகாரம் இல்லாமல் போகும் போது அரசியல் கட்சிகளில் பிரச்சினைகள் உருவாவது சகஜமாகும். எல்லா கட்சிகளிலும் குழப்பங்கள் இருக்கத்தான் செய்கிறது.
தேசிய மக்கள் சக்தியின் 159 உறுப்பினர்களுடன் பெரும்பான்மை ஆட்சி இருந்தாலும் பிரச்சினைகள் இருக்கிறது.

பிரதமரை ஒதுக்கும் அரசு
கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தியாவுக்கு செல்லும் வரை காத்திருந்து, கல்வியமைச்சினால் ஆசிரியர்கள் சம்மேளனம் நடத்தப்பட்டது. ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாடு - அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதமர் ஹரிணிக்கு உரையாற்ற சந்தர்ப்பம் வழங்கவில்லை.
வரலாற்றை எடுத்து நோக்கினால் தேசிய நிகழ்வொன்றில் பிரதமருக்கு உரை ஒன்றை வழங்குவது வழமையாகும்.பிரதமர் ஹரிணியை ஒதுக்கி ஒரு பொம்மையாக வைத்திருக்க அரசியல் சூழ்ச்சி செய்யப்படுகிறது.

இன்று நாடாளுமன்றத்தில் நல்ல திட்டங்கள் ஏதும் கொண்டு வந்தால் அது தேசிய மக்கள் சக்தியின் திட்டம் அல்லது பெலவத்தவின் திட்டம். ஆனால் பலனற்ற திட்டங்கள் மற்றும் சட்டமூலங்கள் குறிப்பாக அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட குற்றவியல் சட்டகோவையின் திருத்தச் சட்டமூலம் எல்லாம் பிரதமர் ஹரிணியின் யோசனைகள் என பொது மக்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு பல பிரச்சினைகள் அரசுக்குள் உருவாகியுள்ளது என அவர் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |