மீண்டும் ஒரு யுத்தத்திற்கு ஐ.எம். எப் நிதி வழங்குகின்றதா..! சபையில் சிறீதரன் கேள்வி (video)
இந்த நாட்டிலே தமிழர் பகுதிகளை கபளீகரம் செய்து, தமிழர்களை இலங்கையிலே இல்லாமல் செய்வதில் இந்த நாடு மிக முக்கியமான பாத்திரத்தை கொண்டுள்ள நிலையில் சர்வதேச நாணய நிதியம் இந்த விடயத்திற்கு உடந்தையாக இருக்கப்போகின்றதா என நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (26.04.2023) உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், காணாமலாக்கப்பட்டவர்கள் இதுவரை வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களாகவே இருக்கும் நிலையிலும், எங்களது நிலங்கள் தொடர்ந்தும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையிலும், தமிழ் தேசிய இனம் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சூழலிலும், சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு உதவி வழங்கியுள்ளது என்பதைதான் நாம் பார்க்கின்றோம்.
சர்வதேச நாணய நிதிய கடன்
இதற்கமைய சர்வதேச நாணய நிதிய நிபந்தனை மூலம் இந்த நாட்டில் இருக்கும் இனப்பிரச்சினை அல்லது அரசியல் பிரச்சினை தொடர்பில் அவர்களால் என்ன செய்ய முடிந்தது? மீண்டும் ஒரு யுத்தத்திற்கு ஐ.எம். எப் நிதி வழங்குகின்றதா?
இந்த நாட்டிலே ஒரு இனம் அழிக்கப்பட்டு வருகின்றது, அந்த இனத்தின் வாழ்க்கை தொலைக்கப்பட்டு வருகின்றது.
இந்த சூழலில் சர்வதேச நாணய நிதியம் வழங்குகின்ற கடன் ஊடாக இலங்கை தன்னை கட்டியெழுப்பிக்கொண்டு மீண்டும் ஒரு இனத்தை அழிக்க முற்படும் என்பதை குறிப்பிடுகின்றோம்.
இவ்வாறு நடக்காது என்பதற்கு உத்தரவாதம் இல்லை. இலங்கையினுடைய பொருளாதரத்தில் ஒரு பெரிய யுத்தத்தை கடன் வாங்கித்தான் நடத்தியது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
நெடுந்தீவு படுகொலை
மேலும் நெடுந்தீவில் 5 முதியவர்கள் கடற்படை முகாமுக்கு அருகில் வைத்து நபர் ஒருவரால்
வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் கடற்படைக்கும் இராணுவத்துக்கும்
உள்ள தொடர்புகள் குறித்து ஆராயப்பட வேண்டும்.
கடந்த 22.04.2023 இல் நெடுந்தீவு மண்ணில் இடம்பெற்ற ஒரு பாரிய மனிதப் படுகொலை தொடர்பில் இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன். 5 வயோதிபர்களான திருமதி நாகசுந்தரி கார்த்திகேசு (83 வயது).இவரது கணவன் குமுதினிப் படகில் வைத்து கடற்படையினரால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டவர். நாகநாதி பாலசிங்கம் (82 வயது), அவரின் மனைவியான கண்மணிப்பிள்ளை பாலசிங்கம் (76 வயது), நாகரத்தினம் வேலாயுதபிள்ளை (78 வயது), சுப்பிரமணியம் மகாதேவா (74 வயது) ஆகியோர் ஒரு நபரால் கடற்படையினரின் முகாமுக்கு அருகில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
அதேநேரம் 100 வயதை எட்டிய மூதாட்டி பூரணம் கனகர் படுகாயத்தோடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இங்கே கடற்படை முகாமுள்ளது. அதன் அருகோடு நெடுந்தீவு மண்ணில் யாரும் பார்க்க முடியாத ஒரு பிரதேசத்தில், உடனடி நடவடிக்கை எடுக்க முடியாத ஒரு பிரதேசத்தில் மிக மோசமாக இவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
இது இந்த ஆண்டிலே நடந்த மிகப்பெரிய படுகொலை. இது நியாயமாக, நீதியாக விசாரிக்கப்பட வேண்டும். இதில் கடற்படைக்கும் இராணுவத்துக்கும் உள்ள தொடர்புகளும் ஆராயப்பட வேண்டும்.
இந்த நாட்டில் தமிழர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதனைத் தான் இந்தச் சம்பவமும் உறுதிப்படுத்துகின்றது.
இதேவேளை கிளிநொச்சி கௌதாரி முனையில் இருக்கின்ற மண்ணை அகழ்வதற்காக அஜித் தென்னக்கோன் என்பவருக்கு வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா விசேடமான உத்தரவின் பேரில், நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அந்த மண்ணை அகழக்கூடாது என்ற கட்டளை இருக்கும் நிலையில் - இன்னும் தீர்ப்பு வழங்கப்படாத நிலையில் பூநகரி பிரதேச செயலாளரை வைத்து அவருக்கூடாக அந்த மண்ணை அகழ்ந்து விற்பனை செய்வதற்கான முயற்சியில் வடக்கு ஆளுநர் ஈடுபட்டுள்ளார்.
இந்த விடயத்தையும் இந்தச் சபையில் பதிவு செய்கின்றேன். மிக முக்கியமாக ஜீவன் தியாகராஜாவின் நிதி நடவடிக்கைகள், அவர் செய்கின்ற ஊழல் நடவடிக்கைகள், அரச நடவடிக்கை துஷ்பிரயோகங்கள் தொடர்பாகவும் இந்தச் சபை கவனம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
மேலதிக செய்தி-ராகேஷ்
இது தொடர்பிலான முழுமையான தகவல்களை உள்ளடக்கி வருகின்றது பின்வரும் காணொளி,

பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கல்.... 200 கி.மீ நீள கால்வாய்: தண்டிக்க திட்டமிடும் இந்தியா News Lankasri

இந்தியாவின் எதிரி நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தல் - கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri
