திருகோணமலையில் உத்தரவின்றி மூடப்பட்ட வீதி - இம்ரான் எம்பி கண்டனம்
திருகோணமலை - கருமலையூற்று கடற்கரைப் பகுதியில் விமானப்படையினரால் ஏற்படுத்தப்பட்ட வீதித் தடை மற்றும் அங்கு நிலவும் பதற்றமான சூழலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நேற்று முன்தினம்(14.05.2026) கள விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டுள்ளனதுடன், அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளார்.
மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
அறிக்கையில் தெரிவி்க்கப்படுவதாவது,
அனுமதியுமின்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், கடற்றொழிலாளர்கள் தமது வாழ்வாதாரத் தொழிலை முன்னெடுக்க முடியாத நிலையும் உருவாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் உரிய அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது, குறித்த வீதித் தடை அகற்றப்படும் என பிரதி அமைச்சர் அன்றைய தினமே உறுதியளித்திருந்தார்.
இருப்பினும், வீதித் தடை முழுமையாக அகற்றப்பட்டுவிட்டதாகக் கூறப்படும் செய்திகள் கள நிலவரத்திற்கு முரணாக உள்ளன.
நேற்று முன்தினம்(14) நான் மேற்கொண்ட கள விஜயத்தின் போது, அகற்றப்பட்டதாகக் கூறப்பட்ட கடவை இன்னும் வீதிக்கு அருகிலேயே காணப்படுவதையும், அந்தப் பகுதியில் தொடர்ச்சியாக விமானப்படை அதிகாரிகள் நிலைகொண்டிருப்பதையும் அவதானிக்க முடிந்தது. இது மக்களிடையே பெரும் சந்தேகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
எழுந்துள்ள கேள்வி
இந்த நிலையில், பொதுமக்கள் பயன்படுத்தும் பொது வீதியை மூடுவதற்கு யாருடைய உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது?
முறையான முன்னறிவித்தல் இன்றி இவ்வாறான ஒரு தன்னிச்சையான நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான காரணம் என்ன?
பிரச்சினை தீர்க்கப்பட்டதாகக் கூறப்பட்ட போதிலும், அகற்றப்பட்ட கடவை ஏன் இன்னும் அந்த இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளது?

கடவை அகற்றப்பட்டதாகக் கூறப்பட்டு 9 நாட்கள் கடந்தும், ஏன் இன்னும் விமானப்படை அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறாமல் தங்கியுள்ளனர்? உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
அத்துடன், கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பொதுமக்களின் சுதந்திரமான நடமாட்டத்தையும் பாதிக்கும் இவ்வாறான நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் தெளிவான விளக்கத்தை வழங்க வேண்டும்.
வெறுமனே கண்துடைப்பு நடவடிக்கைகளைச் செய்யாமல், குறித்த வீதித் தடையை அந்த இடத்திலிருந்து முழுமையாக அகற்றி, மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.