அரச அதிகாரிகள் மீது முன்வைக்கபட்டுள்ள குற்றச்சாட்டு! அரசாங்கத்தின் அதிரடி தீர்மானம்
நாடாளுமன்ற நிதி குழுக்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்படுவதாக நாடாளுமன்ற குழுக்களின் தலைவர்கள் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.
இதற்கமைய கோப் மற்றும் கோபா உட்பட அனைத்து நாடாளுமன்ற குழுக்களுக்கும் செல்லுகையில், அரச அதிகாரிகள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்து விசேட வழிகாட்டலினை வெளியிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு
இது தொடர்பில் கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைவர்கள்,நாடாளுமன்ற குழுக்களுக்கு வரும் பெரும்பாலான அரச அதிகாரிகள் உரிய தயார் நிலையில் வருவது இல்லை.
அமைச்சுக்களின் செயலாளர்கள் உட்பட பிரதான நிர்வாக அதிகாரிகள் கணக்காய்வு குறித்தும் கணக்காய்வாளர் நாயகத்தின் வழிகாட்டல்களை அவதானத்தில் கொள்ளாது சந்திப்புகளுக்கு வருகின்றனர்.
இதனால் நாடாளுமன்ற குழுக்களின் நேர-காலம் வீணடிக்கப்படுவதாக தமது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளனர்.
அரசாங்கத்தின் தீர்மானம்
இது தொடர்பில் குறித்த அமைச்சுக்களின் செயலாளர்கள் கூறுகையில், நாடாளுமன்றத்திற்கு அழைத்து தம்மை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்விகளை கேட்பதும், பின்னர் அவற்றை ஊடகங்களுக்கு வெளியிடுவதுமாக உள்ளனர். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளனர்.
இதனடிப்படையில் இருதரப்பினருக்கும் நெருக்கடிகளை ஏற்படுத்தாத வகையில் பொது வழிகாட்டல் ஒன்றை முன்வைக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |