ஆயிரக்கணக்கான அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
2023 உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிடவிருந்த அரச ஊழியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்துள்ளார்.
நேற்று(02.05.2023) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மீண்டும் சேவையில்
உள்ளூராட்சிமன்ற தேர்தலலுக்காக வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள அரச ஊழியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்வது தொடர்பில் பரிந்துரைகள் வழங்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இதன்படி உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, வேட்புமனுக்களை தாக்கல் செய்த அரச ஊழியர்கள், தாங்கள் போட்டியிடும் வட்டாரத்திலுள்ள அரச நிறுவனங்களை தவிர்த்து அருகிலுள்ள வேறு வட்டாரங்களில் இடமாற்றம் மூலம் சேவையில் ஈடுபட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள்,மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் என்ற அடிப்படையில் பிரதமர் தினேஸ் குணவர்தன இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.