அமைச்சு பதவி வழங்கப்படாத ஆளும் கட்சி உறுப்பினர்களின் நிலை
அமைச்சு அல்லது இராஜாங்க அமைச்சுப் பதவி வழங்கப்படாத ஆளும் கட்சியின் உறுப்பினர்களை திருப்திபடுத்தும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட பதவிகளை வழங்க அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமைச்சு, பிரதி அமைச்சு அல்லது இராஜாங்க அமைச்சுப் பதவி வழங்கப்படாத ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சரவை அமைச்சு அல்லது இராஜாங்க அமைச்சுக்களை கண்காணிக்காது அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை நேரடியாக கண்காணிக்கும் வகையில் பதவி வடிவமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவான மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த பதவி வழங்கப்பட உள்ளது.
அரசாங்கத்தினால் தற்பொழுது பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் பல மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவற்றைக் கண்காணிப்பதற்கு இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி அண்மையில் சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் இவ்வாறு கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.