அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்திற்குள்ளேயே தமது செல்வாக்கை முற்றுமுழுதாக இழந்துள்ளது : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்(Photos)
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்திற்குள்ளேயே தமது செல்வாக்கை முற்று முழுதாக இழந்து இருக்கின்ற ஒரு நிலையிலேதான் இன்று தேர்தல்கள் அனைத்தையும் பிற்போடுகின்றது எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
காரைநகர் சலோம் தேவாலயத்தில் இன்று (11) இடம்பெற்ற மக்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
எந்த ஒரு நாடும் ஜனநாயகத்தை மதிக்கின்ற நாடாக இருந்தால் அந்த நாட்டினுடைய தேர்தல்கள் குறிப்பிட்ட காலத்தினுள் நடைபெற வேண்டும். வழமையாக நான்கு வருடம் அல்லது ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை அந்த நாட்டினுடைய கட்டமைப்புக்கு அமையத் தேர்தல்கள் மக்களுடைய ஆணையைப்பெற்று நடத்தப்பட வேண்டும் என்பதுதான் முறை.
ஆனால் எங்களது நாட்டில் தேர்தல்களை நடத்தாமல் தள்ளிப்போடுவது என்பது ஒரு சாதாரண விடயமாக இன்று இருக்கிறது.
மக்களது ஏனென்றால் ஆணையைப் பெற்றவர்கள் மக்கள் மத்தியிலே தங்களது நம்பிக்கையைத் தக்கவைக்க முடியாத நிலையிலேயே அடுத்த தேர்தல் வருவதற்கிடையே உள்ள மற்ற தேர்தலை நடத்தாமல் பிற்போட்டு மக்களையும் ஏமாற்றிக்கொண்டு போவதுதான் வழமை.
அதுபோல இன்று இந்த அரசாங்கம் 2/3 பெரும்பான்மை தங்களுக்கு இருக்கின்றது எனக்
கொக்கரித்துக்கொண்டு இருந்து உள்ளூராட்சி தேர்தல்களில் முகங்கொடுக்க முடியாத
அளவுக்கு அல்லது மாகாண சபை முறைமைக்கு முகங்கொடுக்க முடியாத நிலையிலே, அனைத்து
தேர்தல்களையும் பிற்போடுகின்ற வகையிலேதான் அவர்களது செயற்பாடுகள் அனைத்தும்
உள்ளது என தெரிவித்துள்ளார்.