அரசாங்கத்தால் வழங்கப்படும் கொடுப்பனவை பெற்றுக்கொள்வதற்கு திண்டாடும் மக்கள்
அரசாங்கத்தால் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்குவதில் சீரான முறைமை கடைப்பிடிக்கப்படாமையினால் உரியநேரத்திற்கு அவற்றை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பண்டிகை காலத்தை முன்னிட்டு சமுர்த்தி உதவிபெறும் குடும்பங்கள் மற்றும் வறுமை கோட்டிற்குட்பட்ட குடும்பங்களிற்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என அரசாங்கம் அவசரமாக அறிவித்திருந்தது.
அந்தவகையில் நேற்றைய தினத்திலிருந்து குறித்த தொகையினை மக்களுக்கு வழங்கும் செயற்பாடுகள் பிரதேச செயலகங்களூடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை அவசரமாக முன்னெடுக்கப்பட்ட இத்தீர்மானத்தால் வவுனியாவின் சில கிராம சேவகர் பிரிவுகளில் அதிகமான பொதுமக்கள் திரண்டுள்ளதுடன் ,இரவு 8 மணிக்குப் பின்னரும் அலுவலகங்களில் காத்திருந்து குறித்த தொகையினை பெற்றுச்செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
முறையான ஒரு திட்டம் வகுக்கப்படாமல் அவசரமாக அரசினால் குறித்த அறிவிப்பு
வெளியாகிமையால் உரிய காலத்திற்குள் கொடுப்பனவை பெற்றுக்கொள்ள முடியாமல்
பொதுமக்கள் திண்டாடி வருவதுடன், அவற்றை வழங்குவதில் அரச ஊழியர்களும் பல்வேறு
சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
சில கிராமங்களில் பயனாளர் பட்டியல் தொடர்பாகவும் பல்வேறு பிரச்சினைகள்
எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.