சலுகை விலையில் சொகுசு வாகனம் எனக்கூறி 22.7 மில்லியன் மோசடி! புலனாய்வாளர்களிடம் சிக்கிய அரச அதிகாரி
இலங்கை பொது நிர்வாக அமைச்சகத்தில் பணிபுரியும் உதவி கூடுதல் செயலாளர் ஒருவர், 22.7 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதி மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தெஹிவளை, நெடிமாலா பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய குறித்த சந்தேக நபர், கொழும்பு பகுதியைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர் அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சலுகை விலையில் சொகுசு வாகனம்
துறைமுகத்தில் நடைபெற்ற ஏலத்தில் சொகுசு வாகனம் கிடைத்ததால், சலுகை விலையில் சொகுசு வாகனம் வழங்குவதாக உறுதியளித்து அந்த அதிகாரி பணம் பெற்றதாக புலனாய்வாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், சந்தேக நபரான அதிகாரி, ஏழு மாதங்களுக்கு முன்பு துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையில் பணிபுரிந்தபோது இந்தப் பணத்தைப் பெற்றதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணையில் வாகனம் விநியோகம் செய்யப்படவில்லை என்றும், பணம் திரும்ப வழங்கப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
அதனை தொடர்ந்து, முறைப்பாட்டாளர், டிசெம்பர் மாதம் பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ள நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.