மக்களை சவக்குழிக்குள் புதைக்கும் ஜனாதிபதியாக திகழும் கோட்டாபய! கோவிந்தன் கருணாகரம் குற்றச்சாட்டு (VIDEO)
2009 ஆம் ஆண்டு ஒரு இலட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை முள்ளிவாய்க்காலில் கொன்று குவித்தவர், இன்று இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும் ஒரு சவக்குழிக்குள் புதைக்கும் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச திகழ்வதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
நாட்டிற்கு சாபக்கேடாக மாறியுள்ள ஜனாதிபதி
கோட்டாபய ராஜபக்ச இந்த நாட்டிற்கு சாபக்கேடு.இந்த நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு எரிபொருள்,எரிவாயு,மின்சாரம்,உணவுப்பொருட்கள்,பால்மா என பெரும் தட்டுப்பாடே ஏற்பட்டுள்ள நிலையில் எரிபொருள் என்பது மிக முக்கியமான தேவையாக கருதப்படுகின்றது.
எரிபொருள் இல்லாவிட்டால் நாடு ஸ்தம்பிதம் அடையும் நிலைக்கு தள்ளப்படும். உணவு உற்பத்தி, விநியோகம்,போக்குவரத்து உட்பட அனைத்து விடயங்களும் எரிபொருளை அடிப்படையாக வைத்து தான் நடைபெறுகின்றது.
அத்தியாவசிய சேவையினை அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. இந்த அத்தியாவசிய சேவைகளுக்குள் உணவு விநியோகம்,சுகாதாரம்,விவசாயம் என்பன உட்படுத்தப்படுவது அவசியம் என்றாலும் இந்த தேவைகளுடன் இணைத்து சிறு வியாபாரிகளும் அத்தியாவசிய சேவைக்குள் உள்வாங்கப்பட வேண்டும்.
இன்று சிறு வியாபாரிகள்,மீனவர்கள்,முச்சக்கர வண்டி சாரதிகள்,கூலித்தொழில் செய்வோர் போன்றோர் அன்றாடம் தமது வாழ்வாதாரத்தினை கொண்டு செல்ல முடியாத நிலையேற்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டி சாரதிகள் முச்சக்கர வண்டியை தவணைமுறை அடிப்படையில் வங்கிகளிலும் லீசிங் நிறுவனங்களிலும் பெருமளவு கடனில் பெற்றுள்ளவர்கள். இவர்களின் தேவை நாட்டுக்கு முக்கியமாக தேவையாகவுள்ள நிலையில் அவர்கள் இன்று தமது குடும்பத்தினையே கொண்டு நடாத்த முடியாத நிலைக்கு இந்த எரிபொருள் பிரச்சினை தள்ளியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்கள்
மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மீன்பிடி,விவசாயத்தினையே அதிகளவில் நம்பியுள்ளனர்.வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களும் அதிகளவில் இந்த மாவட்டத்தில் வாழ்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அன்றாடம் கூலித்தொழில் ஈடுபடும் மக்கள் தமது தொழிலை சிரமமின்றி மேற்கொள்வதற்கான முன்னுரிமை வேலைத்திட்டத்தினை அரசாங்க அதிபர் முன்னெடுக்க வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்த வரையில் நிர்வாக செயற்பாடுகள் என்பது சீர்குலைந்த நிலையிலேயே காணப்படுகின்றது. இன்று கிராமபுற பாடசாலைகளை நடாத்துமாறு அரசாங்கம் கூறுகின்றது.
கிராமத்திற்கு செல்லும் ஆசிரியர்கள் அங்கு வசிப்போர் அல்ல.பல கிலோமீற்றர் தூரமிருந்து செல்பவர்கள் உள்ளனர்.பொது போக்குவரத்துக்கூட இல்லாத பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் எவ்வாறு கடமைக்கு செல்வார்கள்.
உள்ளுராட்சிமன்ற தலைவர்களுக்கு அறிவுறுத்தல்
இதேபோன்று தனியார் வகுப்புகளை குறிப்பட்ட நாளைக்கு நிறுத்துமாறு மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளுராட்சிமன்ற தலைவர்களை அழைத்து அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.
இந்த நாட்டின் அரசாங்கத்தினால் இந்தியாவிடம் எரிபொருட்கள் ஒரு கால கடன் அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்டது.அந்த கடன் திட்டம் முடிவடைந்துவிட்டதாக தற்போது கூறுகின்றார். அடுத்த கப்பல் எப்போது வரும் என்று தெரியாது என எரிபொருள் துறை அமைச்சர் கூறுகின்றார்.
ஆனால் இந்த அமைச்சர் கட்டாருக்கு எரிபொருள் கடன் கேட்டுச்சென்றுள்ளார். பெற்றோர் இந்த நாட்டில் முடிவடைந்த பின்னரே இவர்கள் பெட்ரோல் கடன் கேட்டுச்செல்கின்றனர். இவ்வாறு முகாமை செய்ய தெரியாத அமைச்சர்களும், ஜனாதிபதியும் இந்த நாட்டுக்கு தேவையா?
இந்த நாட்டின் அரச தலைவராகவுள்ள ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச இந்த நாட்டின் சாபக்கேடு. இவர் தனிமனிதனாக இந்த நாட்டு மக்களை சவக்கிடங்கிற்குள் புதைக்குமளவிற்கு செயற்பட்டு வருகின்றார்.
2009 ஆம் ஆண்டு இறுதி யுத்த காலத்தில் முள்ளிவாய்க்கால் என்னும் சிறிய நிலப்பகுதிக்குள் ஒரு இலட்சத்திற்கு 40ஆயிரம் மக்களை கொன்று குவித்தவர் இன்று இந்த ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் சவக்குளிக்குள் புதைக்கும் ஒரு ஜனாதிபதியாக கோட்டாபய திகழ்கின்றார் என்றும் தெரிவித்துள்ளார்.