நியூயோர்க்கில் குவைத் முக்கியஸ்தரை சந்தித்து கலந்துரையாடியுள்ள இலங்கை ஜனாதிபதி
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76ஆவது கூட்டத்தொடர் அமெரிக்காவின் நியூயோர்க்கில் இன்று ஆரம்பமாகின்றது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் இந்த கூட்டத்தொடர் இடம்பெறவுள்ளதுடன், இதில் பங்கேற்பதற்காக இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட தூதுகுழுவினர் நியூயோர்க் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa), குவைத் பிரதமர் ஷயிக் சபா அல்-அஹமட் அல்-சபாவை (Sheikh Sabah Al – Hamad Al- Sabah) நியூயோர்க்கில் வைத்து சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.
இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான 50 ஆண்டுகால நெருக்கமான மற்றும் நட்பு இராஜதந்திர உறவுகளை நினைவு கூர்ந்த இரு தலைவர்களும் உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று உறுதிபூண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குவைத்தில் அதிக எண்ணிக்கையிலான இலங்கையர்கள் வேலை செய்வதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி கோட்டபாய, திறமையான தொழிலாளர்களுக்கு மேலும் வாய்ப்புகளை வழங்க வேண்டும் என கோரியுள்ளார்.
கோவிட் - 19 தொற்றைக் கட்டுப்படுத்துவதையும், நாட்டில் மேற்கொள்ளப்படும் தடுப்பூசித் திட்டத்தையும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தொற்றுநோய் முடிவிற்கு கொண்டு வரப்பட்டு உலகம் வழமைக்கு திரும்பும்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் சாத்தியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் உணவு பாதுகாப்பு, கல்வி, தகவல் தொழிநுட்பம் மற்றும் சைபர் பாதுகாப்பு குறித்தும் அரச தலைவர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் , இலங்கை ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் இலங்கை வெளியுறவு செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளனர்.