கோட்டாபயவுக்கு தெரியாதது - ரணிலுக்கு தெரியும்! மகிந்தவின் நெருங்கிய சகா
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு சுற்றுலாப் பயணிகளின் பெறுமதி தெரியாவிட்டாலும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுற்றுலாப் பயணிகளின் பெறுமதியை புரிந்தவர் என ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவரும் மகிந்த ராஜபக்சவின் மிகவும் நெருக்கத்துக்குரியவருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
மத்தள விமான நிலையத்தில் நேற்று வந்திறங்கிய ரஷ்ய சுற்றுலாப் பயணிகளை வரவேற்க சென்றிருந்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மத்தள விமான நிலையத்தை நெற் களஞ்சியமாக மாற்ற இடமளிக்க போவதில்லை
சிகப்பு பிடியாணை பிறப்பித்து உதயங்கவை தடுத்து நிறுத்த முடியாது. மத்தள விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் வேலைத்திட்டத்தை இன்று முதல் ஆரம்பித்துள்ளேன்.
ராஜபக்சவினரை வீட்டுக்கு அனுப்பி விட்டு, மத்தள விமான நிலையத்தை நெற் களஞ்சியமாக மாற்றிய காலம் மீண்டும் ஏற்பட இடமளிக்க போவதில்லை.
அதிகளவான சுற்றுலாப் பயணிகளை மத்தள விமான நிலையம் ஊடாக வரவழைத்து மத்தள விமான நிலையத்தை முன்னேற்ற நடவடிக்கை எடுப்பேன். இதற்கு அதிகாரிகளின் உதவியும் எமக்கு தேவை.
சுற்றுலாப் பயணிகளை துரிதமாக விமான நிலையத்திற்கு வெளியில் அனுப்ப வேண்டும்
கடந்த முறை ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் மத்தள விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்கு வந்த போது, அவர்கள் விமான நிலையத்தில் இருந்து வெளியில் வர 4 மணி நேரம் ஆனாது.
சுற்றுலாப் பயணிகள் விமான நிலையத்தில் இறங்கியதும், அவர்களுக்கு உதவிகளை வழங்கி துரிதமாக விமான நிலையத்திற்கு வெளியில் அனுப்பி வைக்க வேண்டும். கால தாமதம் ஆகும் போது சுற்றுலாப் பயணிகளுக்கு நாட்டின் மீது வெறுப்பு ஏற்படும் எனவும் உதயங்க வீரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.