நாட்டில் 15 மாதங்களில் பல கோடி ரூபாவாக அதிகரித்துள்ள தங்கக் கடன்!
2026 மார்ச் மாதம் வரை தங்கப் பொருட்களை அடகு வைத்து வணிக வங்கிகளில் பெற்றுக் கொள்ளப்பட்ட மொத்தக் கடன் தொகை 101,169 கோடி (ஒரு இலட்சத்து ஓராயிரத்து நூற்று அறுபத்தொன்பது கோடி) ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரத் தரவுகள் மூலம் தெரியவருவதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறைப் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டின் இறுதியில் இந்தக் கடன் தொகை 66,024 கோடி (அறுபத்தாறாயிரத்து இருபத்து நான்கு கோடி) ரூபாயாக இருந்ததாகக் குறிப்பிட்ட பேராசிரியர், 2026 மார்ச் வரையிலான கடந்த பதினைந்து மாத காலப்பகுதியில் தங்கப் பொருட்களை அடகு வைத்து வணிக வங்கிகளில் கடன் பெறுவது 35,145 கோடி ரூபாயினால் அதிகரித்துள்ளது.
15 மாதங்களில் அதிகரித்துள்ள தொகை
இத்தரவுகளை இந்நாட்டின் மொத்தக் குடும்பங்களின் எண்ணிக்கையான 6 மில்லியனால் வகுப்பதன் மூலம் ஒரு குடும்பம் தங்கப் பொருட்களை அடகு வைத்து வணிக வங்கிகளில் பெற்றுக்கொண்டுள்ள கடன் தொகையை அறிந்துகொள்ள முடியும்.
அதற்கமைய 2026 மார்ச் மாதமளவில் ஒரு குடும்பம் தமக்குச் சொந்தமான தங்கப் பொருட்களை அடகு வைத்து வணிக வங்கிகளில் இருந்து 1,67,761 (ஒரு இலட்சத்து அறுபத்தேழாயிரத்து எழுநூற்று அறுபத்தொன்று) ரூபாய் பணத்தைக் கடனாகப் பெற்றுள்ளது.

2024ஆம் ஆண்டின் இறுதியில் இத்தொகையானது 1,09,482 (ஒரு இலட்சத்து ஒன்பதாயிரத்து நானூற்று எண்பத்திரண்டு) ரூபாயாக இருந்ததென்றும், கடந்த பதினைந்து மாத காலப்பகுதியில் அதன் அதிகரிப்பு 58,279 ரூபாயாகும்.
இலங்கையின் வணிக வங்கிகளினால் தனியார் துறைக்கு வழங்கப்படும் கடன்கள் மற்றும் முன்பணங்களில் (அட்வான்ஸ்கள்) குறிப்பிடத்தக்கதொரு வளர்ச்சி கடந்த ஒன்றரை வருட காலப்பகுதிக்குள் அவதானிக்கக் கூடியதாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.