நீதிமன்றத்தில் வழக்கு பொருளாக வைக்கப்பட்டிருந்த தங்கத்தை காணவில்லை
கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கு பொருட்களை வைக்கும் அறையில் வைக்கப்பட்டிருந்த 47 பவுண் தங்கம் காணாமல் போயுள்ளதாக தெரியந்துள்ளது.
சி.ஐ.டி அதிகாரி எனக்கூறி வந்த தங்கத்தை எடுத்துச் சென்றுள்ளார்
குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் அதிகாரி எனக்கூறி வந்த ஒருவர், கடந்த நவம்பர் மாதம் 23 ஆம் திகதி கொழும்பில் இரண்டு பொலிஸ் நிலையங்கள் ஊடாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குடன் சம்பந்தப்பட்ட வழக்கு பொருட்களாக வைக்கப்பட்டிருந்த இரண்டு தங்க உருண்டைகளை கொண்டு சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உறுதிப்படுத்துவதற்காக அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு வழங்க தங்கத்தை கொண்டு செல்வதாக கூறி, அந்த நபர் அவற்றை எடுத்துச் சென்றுள்ளார்.
குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் அதிகாரி எனக்கூறிக்கொண்ட அந்த நபர், அது சம்பந்தமான கடிதங்களை வழக்கு பொருட்களை வைக்கும் அறையின் பொறுப்பாளரிடம் வழங்கியுள்ளார்.
நீதிமன்ற பதிவாளர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணை
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நடைபெறும் இரண்டு வழக்குகள் சம்பந்தமான இந்த தங்கத்தின் உரிமையாளர் அதனை விடுவிப்பதற்காக நேற்று சென்ற போது, வழக்கு பொருட்கள் வைக்கப்படும் அறையில் வைக்கப்பட்டிருந்த தங்கம் காணாமல் போயிருப்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளர், வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.