மட்டக்களப்பில் சுயதொழில் முயற்சியில் ஈடுபடும் பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கி வைப்பு
மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் சுயதொழிலில் ஈடுபடும் பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.
பின்தங்கிய கிராமங்கள் அபிவிருத்தி உள்நாட்டுக் கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு பொருளாதாரப்பயிர் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பயனாளிகளுக்கான ஆடுகளை வழங்கி வைத்துள்ளார்.
பின்தங்கிய கிராமங்கள் அபிவிருத்தி, உள்நாட்டுக் கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு பொருளாதாரப் பயிர் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சினால் சுமார் ஐந்து மில்லியன் எழுபதாயிரம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் 190 பயனாளிகளுக்கு தலா 30 ஆயிரம் ரூபா பெறுமதியான ஆடுகள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றன.
இதன் முதல்கட்டமாக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனால் 25 பயனாளிகளுக்கான ஆடுகளை இன்று (24) ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெட்ணம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சின் செயலாளர் எஸ். சேனநாயக, மேலதிக செயலாளர் கலாநிதி எஸ். அமலநாதன், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் கே. ஜெகதீஸ்வரன், செயலக உத்தியோகத்தர்கள், பயனாளிகள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.


